என்ன யோசித்தும் போனை மீட்பதற்கான வழி புலப்படாமல் போகவே, புரண்டு படுத்தவள் அப்போதுதான் கடிகாரத்தை பார்த்தாள்.
அவள் எப்போதும் உறங்கும் நேரத்தை தாண்டி இரண்டு மணிநேரம் கடந்திருக்க,
“இதுக்கு மேலயும் நீ தூங்கல நாளைக்கு ஃப்ஸ்ட் ஹவர் லதா மேம் வீணையை மீட்ட மீட்ட நீ தூங்கி தூங்கி விழ வேண்டியதுதான்” என்று தனக்கு தானே எச்சரிக்கை செய்துகொண்டவள்,
இனியும் விழித்திருக்க கூடாது என்ற முடிவோடு இமைகளை மூடினாள் உறங்கும் பொருட்டு.
உங்குவதற்காக இமைகளை மூடியவளுக்கு அந்த உறக்கம் எத்தனை காத தூரத்திற்கு அப்பால் இருக்கிறது என்றுதான் தெரியவில்லை.
புரண்டு புரண்டு படுத்துபார்த்தாள் உறங்குவதற்கான அறிகுறியே அவளுக்குள் தென்படவில்லை.
பின் உறக்கத்தை வரவைக்கும் பொருட்டு உள்ளுக்குள் ஸ்ரீ ராமஜெயத்தை சொல்லியபடியே கண்களை மூடிபடுத்திருந்தவளுக்கு, உறக்கமும் கண்களை இழுத்து சென்ற நேரம்,
எப்போதும் போல் படித்துமுடித்துவிட்டு அவள் பக்கத்தில் வந்து படுத்த ஆரண்யா, அவள் மேல் கால் போட்டு, அவளை அணைத்தபடி படுக்க,
அவளின் அணைப்பு இதழினிக்கு மாலை நடந்த நிகழ்வை நினைவுபடுத்தியது.
திடுக்குற்று கண்விழித்தவள், “ஏய் நகருடி..” என்றாவாறே தன் மொத்த சக்தியையும் சேர்த்து ஆரண்யாவை நெட்டி தள்ள, அவள் தள்ளிய வேகத்தில் பாவம் ஆரண்யா கட்டிலிருந்தே கீழே விழுந்திருந்தாள்.
திடுமென கீழே விழுந்த அதிர்ச்சியில் “ஐய்யோ… அம்மா…” என்று முனகியவாறே எழுந்தமர்ந்த ஆரண்யாவோ, கட்டில் மேல் அமர்ந்திருந்தவளை “ஏன்-க்கா தள்ளிவிட்ட..?” என்று கீழே விழுந்ததில் அடிப்பட்ட தன் இடுப்பு பகுதியை தடவிகொடுத்த படி கேட்க,
“நீ ஏண்டி என்ன கட்டிபுடிச்சிட்டு படுத்த..?” என்றாள் கோவமாக இதழினி.
“நான் எப்பவும் அப்படித்தானே-க்கா படுப்பேன்..” என்றாள் சின்னவளும் சிணுங்கியபடியே.
அது இதழினிக்கும் தெரியும் தான்.. ஆனால் இத்தனை நாட்கள் அவளின் அணைப்பு அவளுக்கு அருவெறுப்பாக தோன்றவில்லையே. இன்று அவள் அணைப்பு அவனை அல்லவா அவளுக்கு நினைவுப்படுத்துகிறது.
இதையெல்லாம் ஆரண்யாவிடம் போய் அவளால் சொல்ல முடியுமா...?
“ஆ.. அதெல்லாம் நேத்தோடே முடிஞ்சி போச்சி… இன்னையிலேந்து என் மேல உன் கால், கை பட்டுச்சி அவ்வளோதான்” என்று ஆள்காட்டி விரலை நீட்டி எச்சரித்தவள்,
“வந்து படு” என்று அவளுக்கு இடம் கொடுத்து இதழினி படுத்து கொள்ள, “என்னாச்சி இந்த அக்கா-வுக்கு.” என்று முனகியவாறே அவளின் பக்கத்தில் சென்று படுத்துகொண்டாள் ஆரண்யா.
அடுத்தநாள் காலையில் டியூஷன் பசங்களை அனுப்பிய கையோடே கல்லூரி-க்கு கிளம்பியவள் கல்லூரி பேருந்தை கூட எதிர்பார்க்காமல் மாற்று பேருந்து பிடித்து கல்லூரிக்கு சென்றாள் அவன் போனை கண்டுபிடிக்கும் பொருட்டு.
கல்லூரிக்கு முதல் ஆளாக அவள் நுழைய, அந்நேரத்தில் வொர்க்கர்ஸ் தவிர வேறு யாருமே அங்கு இல்லை. யாரும் இல்லாமல் இருப்பதே அவளுக்கு வசதியாக இருக்க.
கிடைக்கும் என்ற நம்பிக்கையோடே விழா நடந்த இடத்திற்கு விரைந்தாள்.
விழா மேடை மற்றும் அதை சுற்றிலும் தேடி பார்த்தாள்.
பின் அந்த இடத்தை சுத்தம் செய்த வொர்க்கர்ஸிடம் கூட விசாரித்து பார்த்துவிட்டாள். எல்லோரும் சொல்லி வைத்தாற் போல் தெரியாது என்று கையை விரித்து விட அவளின் நம்பிக்கைதான் சுக்குநூறாக உடைந்து போனது.
மாணவிகளும் ஒவ்வொருவராக கல்லூரிக்கு வந்த வண்ணம் இருக்க, இதில் யாரிடம் சென்று போன் குறித்து விசாரிப்பது என்று நினைக்கும்போதே அவளுக்கு தலையை சுற்றிக்கொண்டு வந்தது.
காரணம் கிட்டத்தட்ட ஒரு லட்சம் மாணவிகளுக்கு மேல் பயிலும் கல்லூரியில் யாரிடம் சென்று என்னவென்று அவளால் கேட்க முடியும்.
இதில் முக்கால்வாசிக்கு பேருக்கு மேல் யாரையும் அவளுக்கு தெரியாது. ஏன் அவள் வகுப்பு மாணவிகளிலே பலரிடம் அவள் பேசியது கிடையாது.
பேசாமல் விஷயத்தை பிரின்சியிடம் சொல்லிவிடலாம் என்றாலோ எங்கே பிரச்சனை பெரிதாகி மொத்தமாக தன் போன் கையைவிட்டு போய்விடுமோ என்ற பயத்தில் அந்த எண்ணத்தையும் மாற்றிக்கொண்டாள்.
அடுத்து என்ன செய்வது என்று புரியாமல் வகுப்பில் சென்று அவள் அமர்ந்துகொள்ள, அப்போதுதான் தாரிகாவும் வந்து சேர்ந்தாள்.
“ஏய் என்ன இவ்வளோ சீக்கரமா வந்துட்ட..?” என்று கேட்டவாறே இதழினி அருகில் சென்று அமர்ந்தவள், “ஆமா… நேத்துலேந்து உனக்கு டிரை பண்றேன் ஏன் என் கால்-அ அட்டண்ட் பண்ணல..” என்று கேட்டவளிடம் வீட்டில் சொன்ன பொய்யையே அவளிடமும் ஒப்புவித்தவள், தாரிகாவிடமும் போன் குறித்து விசாரிக்க தவறவில்லை.
அவளிடம் மட்டும் மல்ல தனக்கு வாழ்த்து சொல்ல தன்னை தேடி வந்த மாணவிகளிடம் கூட போன் குறித்து நாசூக்காக விசாரித்து பார்த்தாள்.
இந்த விசாரணையிலேயே அன்றைய பாட வகுப்புகள் எதையுமே அவள் கவனிக்க வில்லை.
நேரம் ஆக ஆக ஆன்லைன் கிளாஸ் குறித்து வேற அதிகம் யோசித்தாள்.
இரண்டு வார ஓய்விற்கு பின் அன்றுதான் இருவருமே ஸ்டுடியோ-விற்கு திரும்பியிருந்தனர்.
வந்த வேகத்திலேயே அவன் இருந்த மனநிலைக்கு படத்தின் காட்சிக்கு ஏற்ப இரண்டு காதல் பாடல்களுக்கு டியூன் போட்டு முடித்திருந்தான் ரிஷப்.
டியூனுக்கு ஏற்றார்போல் லிரிக்கிஸ்ட் எழுதிகொடுத்த பாடல் வரிகள் அவனுக்கு பிடித்தமில்லாமல் போக, பின் டைரக்டரை தொடர்பு கொண்டு நானே லிரிக் எழுதவா..? என்றவன் கேட்டபோது,
“உங்க டியூன்-க்கு நீங்களே லிரிக்ஸ் எழுதனா நாங்க வேண்டாம்னா சொல்ல போறோம்” என்றார் தனக்கு பரிபூரண சம்மதம் என்பது போல்.
பின் படத்தின் காட்சியையும் ஹீரோயின் இடத்தில் அவளையும் வைத்து, டியூனை உள்வாங்கி அவன் எழுதிகொண்டிருக்கும் போதுதான், அவன் மனநிலையை சீர்குலைப்பது போல் இயக்குனர் பரஞ்சோதி-யே அவர்களை தேடி கொண்டு ஸ்டுடியோவிற்கு வந்திருந்தான்.
அவரை பார்த்த மாத்திரத்திலேயே ரிஷப் நந்தனின் முகம் மாற,
“எதுவா இருந்தாலும் அந்த ஆள் கிட்ட நான் பேசிக்கிறேன் டார்லிங். நீ டென்ஷன் ஆகாத..” என்று ரிஷப்பிடம் சொல்லிவிட்டுதான் பரஞ்சோதி முன்னால் சென்று அமர்ந்தான் கவின்.
“எப்படி சார் இருக்கீங்க..?” என்று பெயருக்கென்று நலம் விசாரித்த கவின், “டீ காஃப்..?” என்று இழுத்தவனை பார்த்து, வேண்டாம் என்பது போல் கைகாட்டிய பரஞ்சோதி,
“என்ன மன்னிச்சிடுங்க தம்பி… அன்னைக்கு செல்வா உங்ககிட்ட ரொம்ப தப்பா பேசிட்டானாமே…” என்று வந்த விஷயம் குறித்து அவனே ஆரம்பிக்க, கவினுக்கு தான் தன் காதுகளையே நம்ப முடியவில்லை இந்த ஆளா இப்படி பேசுவதென்று.
“அது ஒன்னும் இல்ல தம்பி.. நான் தூக்கி விட்ட எத்தனையோ நாய்கள்-ல இந்த நாய்க்கு மட்டும் என் மேல விசுவாசம் ஜாஸ்தி.. அதான் எனக்காக யாரு என்னன்னு கூட பார்க்காம உங்ககிட்ட குரைச்சிட்டான்” என்று என்னதான் பரஞ்சோதி மறைமுகமாக அவர்களை தாக்கி சொன்னாலும் அது ரிஷப் நந்தனுக்கு புரியவே செய்தது.
வந்த கோவத்திற்கு கையிலிருந்த பேனாவை நோட் பேட் மீது போட்டவன், அந்த கோவத்தோடு எழுந்து சென்று அவன் முன்னால் நின்றதோடு,
“விசுவாசமா இருக்கேன்றதுக்காக வெறி புடிச்ச நாய்-அ கூடவே வச்சிகிட்டு சுத்த முடியுமா.. சார்…? அடிச்சி துரத்துறது தானே உங்களுக்கும் உங்கள சுத்தி உள்ளவங்களுக்கும் நல்லது. இல்லன்னா அந்த வெறி உங்களுக்கும் புடிச்சிடுமில்லையா..?” என்ற நேரிடையாகவே அவன் அவரை தாக்க,
“அடடே நீங்களும் இங்கதான் இருக்கீங்களா ரிஷப் தம்பி..” என்றான் என்னவோ இப்போதுதான் அவனை இங்கு பார்ப்பது போல்.
அவனின் கேள்விக்கு பதில் சொல்லாமல், ரிஷப் பரஞ்சோதியையே பார்த்திருக்க,
“ஊட்காருங்க தம்பி” என்று பரஞ்சோதி சொன்ன போது கூட ரிஷப் அமரவில்லை.
“சரி.. நானே விஷயத்துக்கு வர்றேன்.. என்னமாதிரி பணக்காரங்கலாம் எதுக்கு அனாதை ஆசிரமம், சேரிட்டி டிரஸ்ட் வச்சியிருக்காங்கன்னு தெரியுமா..?” என்று இருவரையும் பார்த்து கேட்டவன்,
“புண்ணியம் தேடுறதுக்காகவா..?” என்று கேட்டு இருவரையும் கேள்வியாய் பார்த்தவன், அடுத்து இடி இடியென சிரிக்கவும் செய்ய, கவினும் ரிஷப்பும் ஒருவரையொருவர் பார்த்து கொண்டனர்.
சிரித்து முடித்தவன், “அந்த புடலங்காய்காகலாம் இல்ல. கறுப்பு பணத்த வெள்ளையாக்குறதுக்காகவும்… டொனேஷன், சேரிட்டி-ன்னு கோடி கணக்குல பணம் பார்க்குறதுக்காவும் தான். இப்ப என்னையே எடுத்துக்கோங்க… படம் டைரக்ட் பண்ணிதான் நான் இந்தளவு சொத்து சேர்த்து வச்சியிருக்கன்னு நினைக்கிறீங்களா..?” என்று கேட்டு மீண்டும் சிரித்தவன்,
“பத்து படத்துல சம்பாதிக்கற பணத்த இந்த மாதிரி ஒரு கான்சர்ட்-ல சம்பாதிச்சிடுவேன். அதுலயும் உங்க கான்சர்ட்-னா பிளாக்-ல டிக்கெட்டே பலகோடிக்கு மேல போகும்.. டிக்கெட் விலை எவ்வளோ போட்டு இருந்தாலும் இந்த மக்கள் கண்ண மூடிக்கிட்டு வாங்கிடி வாங்க.” என்று பெருமிதத்தோடு பரஞ்சோதி சொல்ல,
“இப்படி கான்சர்ட்-ன்ற பேர்ல அனாதை புள்ளைங்கள காரணமா காட்டி சம்பாதிக்கிறீங்களே.. உங்களுக்கெல்லா மனசாட்கியே இல்லையே..” என்றான் வலிகள் நிறைந்த குரலில் கவின்.
“அட மனசாட்சி.. மன்னாங்கட்டின்னு எந்த காலத்துல இருக்கீங்க..? மனசாட்சிய எல்லாம் பார்த்தா இந்த காலத்துல பணம் பார்க்க முடியுமா..? இப்படி கிடைக்கிற பணத்த நான் மட்டுமா மொத்தமா அனுபவிச்சிட்டு இருக்கேன். ஆளும் கட்சி எம்.எல்.ஏ-வுக்கு கொடுக்கணும். போலீஸ்-க்கு கொடுக்கணும், இன்ஸ்பெக்ஷன்-னு வரும் போதெல்லாம் அவனுங்களுக்கு வேற படி அளக்கணும். மோப்பம் புடிச்சிட்டு வர்றவனுங்க வாய அடைக்கணும். ஏன் இரண்டு மூணு தடவை என் மேல கம்பிளைண்ட் பண்ணீங்களே அத சரி கட்டவே ஐம்பது லட்சம் கொடுக்க வேண்டியதா போயிடுச்சி” என்று சொன்னவனை இவனுக்கு எப்படி தெரியும் என்பது போல் அதிர்ச்சியோடு பார்த்தான் கவின்.
அவன் அதிர்ச்சியை கணித்த பரஞ்சோதி, “இதெப்படி எனக்கு தெரியும்ணு பார்குறீங்களா..? உள்ள எல்லாமே நம்ம ஆளுங்க தான் தம்பி. நீங்க எங்க போய் கம்பிளைண்ட் ஃபைல் பண்ணாலும் சரி அது கடைசியா என் டஸ்ட்பின்-ல தான் வந்து விழும்.” என்று சொல்லிவிட்டு சிரித்தவனை எரிப்பது போல பார்த்தான் ரிஷப்.
“சரி ஒத்துக்கறேன் என் சுயலாபத்துக்காக கான்சர்ட்-ன்ற பேர்ல உங்கள யூஸ் பண்ணிக்கிட்டேன் தான். நான் ஒன்னும் சும்மா உங்கள யூஸ் பண்ணலையே.. இந்த சீனிஃபீல்டுக்கு உங்கள அறிமுகப்படுத்துனது நான் தானே” என்று மார் தட்டி சொன்னவன்,
“இன்னைக்கு நீங்க கோடிக்கணக்குல சம்பாதிக்கறதுக்கு சான்ஸ்-ன்ற முதல் போட்டது நான் தானே. அதான் அதுக்கான குருதட்சணை-அ நானே எடுத்துகிட்டேன். இதுல என்ன தப்பு இருக்கு..?” என்று மனசாட்சியே இல்லாமல் சொன்னவனை கொலைவெறி தாக்குதலோடு பார்த்தான் ரிஷப்.
“இப்ப என்ன. இனிமே நடக்கபோற கான்செர்ட்-லேந்து உங்களுக்கு பாதி ஷேர் கொடுத்துடுறேன்.. திருப்திதன..” என்றான் இரண்டு பேரையும் விலைக்கு வாங்கி விடும் எண்ணத்தில்.
“எங்கள ஏம்மாத்துனதும் இல்லாம எங்ககிட்டயே இப்படி கேட்க உங்களுக்கு நாக்கு கூசலையா..?” என்றான் கவின்.
“இதுல கூச்சபட என்ன இருக்கு கவின் தம்பி.. நீங்களே சொல்லுங்க எங்கயோ ரயில்வே ஸ்டேஷன், பஸ் ஸ்டாண்ட், சிக்னல்-ல பிச்ச எடுக்க வேண்டிய நாய்களுக்கு தங்க இடமும், மூணு வேல சோறும், போட்டுக்க துணியும் படிப்பும் கொடுத்துகிட்டு இருக்கேனே.. அது போதாதா அந்த நாய்ங்களுக்கு” என்றவரின் எள்ளல் நிறைந்த வார்த்தைகளால் ரிஷப் நந்தனின் கோவம் இப்போது எல்லை தாண்டியிருக்க,
“இப்போ நீயா இங்க இருந்து கிளம்புறீங்களா..? இல்ல நான் கழுத்த புடிச்சி வெளியில தள்ளட்டுமா..?” என்றான் கோவம் நிறைந்த குரலில் ரிஷப்.
அவனின் வார்த்தைகளால் அதிர்ந்த பரஞ்சோதி “பார்த்து பேசுங்க தம்பி..” என்க,
“எல்லாத்தையும் பார்த்ததாலதாண்டா பேசிட்டு இருக்கேன். கழுகு கூட செத்த பொணத்த தாண்டா கொத்தி திண்ணும்.. ஆனா நீ உயிரோட இருக்கறவங்கள வச்சி பணம் சாம்பாதிக்கணும் நினைக்கிறீயே..? நீ எல்லாம் என்ன மாதிரியான மனுஷஜென்மம்.” என்று ஆக்ரோஷமாய் கத்தியவனுக்கு, அன்றொருநாள் அந்த அனாதை இல்லத்திற்கு சென்றதும், அங்கு பார்த்தவைகளும் தான் கண்முன் வந்து போயின.
திரைத்துறையில் இருப்பதால் அடிக்கடி கான்சர்ட் மூலம் தன் பொறுப்பில் இருக்கும் அனாதை இல்லங்களுக்கு பரஞ்சோதி பணம் திரட்டுவதை ரிஷப் நந்தனுமே நன்கு அறிவான் தான்.
அதனாலே அவராக தன்னை தேடி வந்து ஒரு கான்செர்ட் செய்து கொடுக்க முடியுமா என்று கேட்டபோது ரிஷப்-பும் மறுக்கவில்லை.
அவன் ஒத்துகொண்டது கூட அவர் செய்த உதவிக்கு நன்றி செலுத்தும் பொருட்டு அல்ல. ஏதோ அந்த அனாதை குழந்தைங்களுக்கு தன்னால் ஆன உதவியாக இருக்கட்டுமே என்றுதான் பணம் கூட வாங்காமல் அவன் இரண்டு முறை கான்செர்ட் நடத்தி கொடுத்தது.
வெகு நாட்களாகவே அந்த குழந்தைகளை நேரில் சென்று பார்க்க வேண்டும் என்று நினைத்திருந்தவன் ஒரு ஓய்வுநாளில் எந்த வித முன்னறிவிப்பும் இன்றி கவினை தன்னுடன் அழைத்து கொண்டு அதிரடியாக அந்த அனாதை இல்லத்திற்குள் நுழைந்திருந்தான்.
கிழிந்த உடையுடன் இருந்த குழந்தைங்களை பார்த்த மாத்திரத்திலே ரிஷப் நந்தனின் முகம் மாறிவிட்டது.
கட்டில்கள் எதுவும் இல்லாமல் அந்த சிறார்களின் படுக்கை விரிப்புகள் கூட கிழிந்து கந்தலாய் இருந்தன.
இதில் அன்றாடம் அவர்கள் உண்ணும் உணவை வாயருகே கொண்டு செல்ல முடியாத அளவிற்கு அதிலிருந்து கெட்ட வாடை வேறு வந்தது.
அடிப்படை தேவையான பாத்ரூம் கூட அங்கு முறையாக பராமரிக்க படவில்லை.
அவன் நடத்திகொடுத்த இரண்டு கான்செர்ட்-லேயே பல கோடிகளுக்கு மேல் பணம் வசூலாகியிருக்க, இந்த குழந்தைகளின் நிலமை ஏன் இப்படி என்றுதான் அவனுக்கு புரியவில்லை.
அது குறித்து அங்கு உள்ள வேலையாட்களிடம் அவன் கேட்டபோது, மனசாட்சிக்கு பயந்த சிலர் மட்டுமே இங்கு நடக்கும் அநியாயத்தை பற்றி வாய் திறந்தனர்.
சேரிட்டி ஃபண்ட் என்ற பெயரில் பணம் வசூலிப்பதற்காக பெயருக்கென்றுதான் பரஞ்சோதி இந்த ஆசிரமத்தை வைத்திருப்பதாகவும், அப்படி வசூலாகும் பணத்தில் ஒரு ரூபாய் கூட இந்த குழந்தைங்களுக்காக செலவிட படுவதில்லை என்று சொல்ல, அதை கேட்ட இருவருமே ஆடிப்போய் விட்டனர்.
“எப்படி இருந்தாலும் கவர்மெண்ட் சைட்லேந்து இன்ஸ்பெக்ஷன் வரும் போது மாட்டிதானே ஆவாங்க..?” என்று கவின் கேட்டபோது.
“அங்கயும் இவங்க ஆளுங்க இருக்காங்க. அவங்க வர்றதுக்குள்ள இந்த இடமே வேற மாதிரி ஆகிடும். கொள்ள அடிக்கிறவனுங்களுக்கு திட்டம் போடவா சொல்லி தரமுடியும்..?” என்று வார்த்தைகளில் வலியோடு சொன்ன வாட்ச்மேன்,
“இதெல்லாம் நான் தான் சொன்னனேன்னு வெளியில போய் சொல்லிடாதீங்கப்பா.. அப்புறம் என் குடும்பம்தான் நடுத்தெருவுல நிற்கும். ஏதோ நீங்க கேட்டீங்க நானும் மனசு கேட்காம சொல்லிட்டேன்.” என்றவரிடம் சொல்லமாட்டோம் என்று சொல்லிவிட்டு பிளாட்டிற்கு வந்த இருவரின் முகமுமே அங்கு பார்த்ததை நினைத்து இறுகி போய் தான் இருந்தனர்.
கண் முன் நடக்கும் அநியாயத்தை கண்டும் காணாமல் கடந்து செல்ல ரிஷப் நந்தனால் முடியவில்லை.
கோவத்தில் கை முஷ்டிகளை இறுக மூடியபடி, அந்த அலைகடலையே அவன் வெறித்து பார்த்துகொண்டிருக்கும் போதுதான்.
இது குறித்து போலிஸில் புகார் அளிக்கலாம் என்ற படி அவன் அருகில் வந்து நின்றான் கவின்.
“கம்பிளைண்ட் கொடுத்தா மட்டும் இம்மீடியட் ஆக்ஷன் எடுத்துடுவாங்கன்னு நினைக்கிறீயா..? இங்க இருந்து போலீஸ் அங்க போறதுக்குள்ள அங்க எல்லாமே மாறி இருக்கும்.. ப்ராப்பர் எவிடென்ஸ் இல்லாம நம்மால அந்த பரஞ்சோதி-அ நெருங்க கூட முடியாது.” என்று சொல்லி கவினை அவன் தடுக்க,
“அப்போ அப்படியே விட சொல்றீயா..?” என்றான் கவின்.
“நான் விட சொல்லல டார்லிங்.. நாம அவசரப்பட்டு எதாவது செய்ய போய் அது அவன் கைவசம் இருக்கற குழந்தைங்களுக்கு ஏதாவது ஆபத்தாயிடுச்சின்னா.. குழந்தைங்கள வச்சி சம்பாதிக்கிறவன்.. தனக்கு ஒரு பிரச்சனைன்னா அந்த குழந்தைங்கள கொலை பண்ண கூட தயங்கமாட்டான்னு என்ன நிச்சயம்..?” என்றவனின் கேள்வியிலிருந்த நிதர்சனம் கவினுக்கும் புரியவே செய்தது.
“இவன எல்லாம் வேற மாதிரிதான் ஹேண்டில் பண்ணனும்..” என்று யோசனையோடே ரிஷப் சொல்ல கவினும் அதை ஆமோதிக்கும் விதமாக,
“ஆமா.. டார்லிங்” என்றான்.
இருந்தும் மனம் கேட்காமல் குழந்தைகள் நல வாரியத்திற்கு இரண்டு மூன்று முறை தங்களை வெளிகாட்டி கொள்ளாமல் கம்பிளைண்ட் செய்தும் பார்த்தார்கள். ஆனால் அவர்கள் எதிர்ப்பார்த்தது போல் பெரிதாக எதுவும் நடக்கவில்லை.
அதன்பின் பரஞ்சோதியே அவர்களை தொடர்பு கொண்டு தன் படத்திற்கு டேட் கேட்டபோது கூட ரிஷப் நந்தன் மறுத்துவிட்டான்.
இந்த நிலையில்தான் மீண்டும் சேரிட்டிஃப்ண்டிற்காக கான்செர்ட்-டிற்கு டேட் கேட்டு பரஞ்சோதியின் மேனேஜர் செல்வம் நடையாய் நடக்க, அவனையும் விரட்டியடித்திருந்தான் ரிஷப்.
அதனால்தான் இப்போது பரஞ்சோதியே அவர்களை நேரில் சந்திக்க வந்திருப்பது கூட.
“மரியாதை தவறுது தம்பி” என்று ஆள்காட்டி விரலை நீட்டி பரஞ்சோதி எச்சரித்த போது,
“உன் வயசுக்கு மரியாதை கொடுத்துதான் இவ்வளோ நேரம் உன்ன உட்காரவச்சி பேசிட்டு இருந்தது..” என்றான் ரிஷப் நந்தனும் விடாமல்.
“ரொம்ப பேசிட்டீங்க.. இதோட பின் விளைவுகள் ரொம்பவே மோசமா இருக்கபோகுது.” என்று விழிகள் நிறைய கோவத்தோடு இருக்கையிலிருந்து எழுந்தபடி பரஞ்சோதி சொல்ல,
“உன்னால முடிஞ்சத கிழிச்சிகோடா..” என்று ஆத்திரம் நிறைந்த குரலில் சொன்ன ரிஷப் நந்தனின் கரத்தை பற்றிகொண்டான் கவின், எங்கே கோவத்தில் அவனை அடித்துவிடுவானோ என்று.
இருவரையும் விழிகளாலேயே சம்ஹாரம் செய்வது போல் அனல் பார்வை பார்த்தபடியே பரஞ்சோதி அங்கிருந்து வெளியேற,
இப்போது ரிஷப் நந்தனின் பார்வை கவின் மீது தாவியது.
அவனை பார்த்து ரிஷப் மேலும் கீழுமாய் தலையை அசைக்க, அவன் சமிஞ்சை புரிந்த கவினும் பதிலுக்கு அவனை பார்த்து தலையை மேலும் கீழுமாய் அசைத்தான்.




