அவள் போனை எடுத்து திரையை பார்த்தான். ‘சித்தி’ என்ற பெயரில் அழைப்பு வரவே, ‘அவ இன்னும் வீட்டுக்கு போகலையா..?’ என்ற யோசனையோடே அழைப்பை ஏற்காமல் தன் வாட்ச்சைதான் பார்த்தான் ரிஷப்.
அது மணி ஒன்பது நெருங்கிகொண்டிருப்பதை காட்ட, அழைப்பு நின்ற அடுத்த கணம் கவினிடம் இருக்கும் தன் பர்சனல் போனை வாங்கி அவளிடம் கொடுத்திருக்கும் போனிற்கு அழைத்தான்.
“நேற்று உன் இரவில்.. நித்திலவு மடியில்..” என்று திடுமென கேட்ட பாடல் சத்தத்தால் அவளுக்கு தூக்கிவாரிபோட, எங்கிருந்து சத்தம் வருகிறது என்று சுற்றும் முற்றும் பார்த்தவள் இறுதியாகத்தான் தன் மடியிலிருந்த போனை பார்த்தாள்.
அதிவேகமாக அதை கையிலெடுத்து திரையை பார்த்தாள். ‘ரகசிய சிநேகிதன்’ என்ற பெயரில் அழைப்பு வர, இது அவனுடைய போன் என்பதால் இந்த அழைப்பை எடுப்பதா..? வேண்டாமா..? என்ற தயக்கம் அவளுக்கு,
அவளின் தயக்கத்திலேயே அழைப்பு நின்றிருக்க, அவளுக்கோ அப்போதுதான் அப்பாடா என்றிருந்தது.
அதுவும் சில கணங்கள்தான், மீண்டும் அதே பெயரில் அழைப்பு வர, ஒரு வித தயக்கத்துடனே அழைப்பை ஏற்று காதில் வைத்தவள் ஹலோ என்று கூட சொல்லவில்லை அதற்குள் மறுமுனையிலிருந்து,
“ரீச் ஆகிட்டியா இதழ்..?” என்று அக்கறை மிகுந்த குரலில் ரிஷப் நந்தன் வினவ, அவன் குரலை கேட்ட கணத்திலேயே அவளுக்கு சொரேரென்ற உணர்வுதான்.
பதற்றத்துடனே லிஃப்டை நோக்கி விரைந்தவள், எப்படி பஸ் பிடித்தாள் என்பது இப்போது வரையும் அவளுக்குமே தெரியவில்லை தான்.
காரணம் நடந்த நிகழ்வுகளின் தாக்கம் அவளுக்குள் மிகப்பெரிய அதிர்வலையே ஏற்படுத்திருந்தது. சொல்லபோனால் இன்னுமுமே அவள் அந்த நிகழ்வு கொடுத்த தாக்கத்திலிருந்து வெளிவரவில்லை என்பதுதான் உண்மை.
“நான் அங்க போயிருக்க கூடாது” என்று ஆயிரம் முறையாவது அவள் தன்னையே நிந்தித்து இருப்பாள்..
அவன் அணைப்பிற்குள் நின்றிருந்ததையும், அவன் தன்னை தொட்டதையும் நினைக்க நினைக்க அவளுக்கு உமட்டிக்கொண்டு வந்ததோடு, அவன் தொட்ட இடமெல்லாம் இப்போது மிளாகாயை அரைத்து பூசியது போல எரியவும் செய்தது இதழினிக்கு.
அன்று போல் அவனும் ஒன்றும் வேண்டுமென்றே அவளை அணைக்கவில்லையே. கீழே விழப்போனவளை தாங்கி பிடித்தான் அவ்வளவே.
அவன் மட்டும் தக்க சமயத்தில் அவளை தாங்கி பிடித்திருக்காவிட்டால் இன்நேரம் கீழே விழுந்ததில் அவள் இடுப்பெலும்பு உடைந்திருப்பது உறுதி.
ஒருவேளை அப்படி ஒன்று நடந்திருந்தால் கூட அவள் இந்தளவிற்கு தன்னை வருத்தியிருக்க மாட்டாளோ என்னவோ. அவளை பொறுத்த மட்டில் அவனின் உதவி கூட அவளுக்கு உபத்திரமே.
ஏற்கனவே உள்ளுக்குள் அரண்டு போயிருப்பவளுக்கு மீண்டும் அவன் குரலை கேட்டதும் தூக்கிவாரித்தான் போட்டது.
அவளிடமிருந்து எந்த பதிலும் வராமல் போகவே, “ஹலோ.. இதழ் இருக்கியா..?” என்றான் மீண்டும் அவனே,
அவன் குரல் கேட்டு சுயம் திரும்பியவளுக்கு அப்போதுதான் தான் இறங்க வேண்டிய இடம் வந்திருப்பதையே கவனித்தாள்.
பஸ் எடுக்க போகும் தருணத்தில் அவசரஅவசரமாக இருக்கையிலிருந்து எழுந்தவளை பார்த்த கண்டக்டர் வேறு, “ஏம்மா.. இவ்வளோ நேரம் என்ன தூக்கிட்டா இருந்தா..?” என்று சத்தம்போட அது அவன் காதிற்கும் நன்றாக விழவே செய்தது. அதிலிருந்தே அவள் இன்னும் வீட்டுக்கு போகவில்லை என்று அவனுக்கும் புரிந்தது.
“சாரி.. சாரி” என்று கண்டக்டரை பார்த்து சொல்லியவாறே, இறங்கியவளுக்கு அப்போதுதான் அவன் இன்னும் லைனில் இருப்பது நினைவிற்கு வர,
சங்கடத்துடனே போனை காதில் வைத்தவள், “இன்னும் ஃபைவ் மினிட்ஸ்-ல வீட்டுக்கு போய்டுவேன்.” என்றாள் பிடித்தமில்லாத குரலில்.
“ஓகே.. உன் சித்தி போன் பண்ணிட்டே இருக்காங்க.. ரீச் ஆனதும் எனக்கு மெசேஜ் பண்ணு” என்றவன் சொல்ல,
அவளோ, “சார்..” என்றாள் பயம் மிகுந்த குரலில்.
“டோண்ட் வொரி.. நான் அட்டண் பண்ணல” என்றான் அவள் பயத்தை கணித்தவன் போல்,
பதிலுக்கு, “ம்” என்றவள் அழைப்பையும் துண்டித்திருக்க,
“என்னாச்சி.. டார்லிங்..?” என்றான் அதுவரையும் பொறுமையை இழுத்துபிடித்துகொண்டிருந்த கவின்.
“ப்ச்.. தப்பு என்னோடதுதான் கவின்.. அவள பார்க்கணும்னு நினைச்சனே தவிர அவளோட சேஃப்டி பத்தியெல்லாம் நான் யோசிக்கவே இல்லை.” என்று யோசனையோடே சொன்னவன், அதற்கும் ஒரு வழியை கண்டுபிடிக்கவே செய்தான்.
வீட்டின் முன் புறத்தில் இருக்கும் கயிற்றுகட்டிலில் இலக்கியா, சண்முகம் மற்றும் ஆரண்யா மூவருமே அவளின் வருகை எதிர்நோக்கி காத்திருக்க, வாயிலை நெருங்கும்போதே இதழினி அவர்களை கவனித்து விட்டிருந்தாள்.
மூவருக்கும் தெரியாமல் கையிலிருக்கும் போனை மறைத்து உள்ளே எடுத்து செல்வது நடவாத காரியம் என்பதால், அதற்கும் சேர்த்து யோசித்தவாறே கேட்டின் கதவை திறந்து கொண்டு உள்ளே நுழைந்தவளை முதலில் பார்த்தது ஆரண்யாதான்.
“அம்மா.. அக்கா வந்துட்டா..” என்று ஆரண்யா போட்ட சத்தத்தில் மற்ற இருவருமே அவளை பார்த்தனர்.
“என்ன இதழினி..? எத்தனை தடவ உனக்கு போன் பண்றது..? நீ ஏன் போன்-அ எடுக்கவே இல்ல..” என்று அவள் மீதான அக்கறையில் இலக்கியா கேட்ட போது,
“இல்ல சித்தி..” என்று இழுத்தவளுக்கு அவரின் கேள்விக்கு என்ன பதில் சொல்வதென்றே தெரியவில்லை.
பேந்த பேந்த விழித்தபடியே நின்றிருந்தவளை பார்த்து, “என்னாச்சிக்கா.. போன்-அ தொலைச்சிட்டியா..?” என்று ஆரண்யாவே அவளுக்கு ஒரு காரணத்தை எடுத்து கொடுக்க,
“ஆ… ஆமா.. பஸ்-ல மிஸ் ஆகிடுச்சி” என்றாள் அவளும் அதை ஆமோதிக்கும் விதமாக.
“அப்போது இந்த போன் யாருது-க்கா..?” என்று அவள் கையிலிருந்த போன் குறித்து ஆரண்யா எழுப்பிய கேள்வியில் அவளுக்கு அடிவயிறே கலங்கி விட்டது.
“இது… இது..” என்று இழுத்தவள், உடனே “மேம்-மோடது” என்று சமாளிக்க, “ஓ..” என்றவாறே அந்த போனை வாங்கி பார்க்க ஆரம்பித்தாள் ஆரண்யா.
“போன் இல்லாம ஆன் லைன் கிளாஸ் எடுக்க முடியாது இல்ல…” என்று கவலை தொணித்த குரலில் கேட்ட இலக்கியாவை பார்த்து ஆமாம் என்பது போல் மண்டையை மட்டும் ஆட்டிவைத்தவளுக்கு, எப்போது உள்ளே செல்வோம் என்றிருந்தது.
“பாவம் மாமா.. டியூஷன், ஆன்லைன் கிளாஸ்-ல கிடைக்கிற ஃபீஸ்-ல கொஞ்சம் கொஞ்சமா குருவி சேர்க்கறமாதிரி சேர்த்து வச்சி வாங்குனா.. அது எவன் கண்ண உறுத்துச்சோ… பாவி பய அந்த போன்-அ திருடுனவன் கையி-ல கட்டதான் முளைக்கும்..” என்று ஆவேசத்தோடு சொன்னவள்,
“ஏன் மாமா.. தொலைஞ்ச போன்-அ கண்டுபிடிக்க முடியுதா..?” என்றாள் இப்போது கேள்வியாய் சண்முகத்தை பார்த்து.
“முடியும்டி.. ஒவ்வொரு போனுக்குன்னு ஏதோ ஐ.எம்.இ.ஐ ஒரு நம்பர் இருக்கும். அத நமபர்-அ வச்சி கண்டுபிடிச்சிடலாம்..” என்ற சண்முகம்,
இப்போது இதழினி-யை பார்த்து, “எனக்கு தெரிஞ்ச எஸ்-இ ஒருத்தர் இருக்காரு இதழினி.. நீ அந்த ஐ.எம்.இ.ஐ நம்பர்-அ மட்டும் நோட் பண்ணி கொடு.. நான் அவர்கிட்ட விசாரிக்க சொல்றேன்..” என்று சொல்ல அவளுக்கோ பயத்தில் அடிவடிற்றை கலக்கிவிட்டது.
“இவருக்கு ஏன் இப்போ இந்த தேவையில்லாத வேலை..” என்று உள்ளுக்குள் பதறியவள்,
அந்த பதற்றத்தை மறைத்து கொண்டபடியே “ஐய்யோ அதெல்லாம் வேண்டாம் சித்தப்பா… மேடமே அவங்க ரிலேட்டிவ் மூலமா விசாரிக்கறன்னு சொல்லியிருக்காங்க..” என்றவள் சொல்ல,
“பரவாயில்லையே இந்த காலத்துலயும் இப்படி ஒருத்தவங்களா..?” என்று ஆச்சரியப்பட்டுத்தான் போனாள் இலக்கியா.
எப்படியோ அனைவரையும் சமாளித்துவிட்ட திருப்தியில் அவள் இருக்க, அந்த நிம்மதியை குலைப்பது போல், அந்த போனை நோண்டிகொண்டிருந்த ஆரண்யாவோ, “அது யாரு-க்கா.. ரகசிய சிநேகிதன்…?” என்று அவளை பார்த்து கேள்வியெழுப்ப,
அவளின் கேள்வியால் இலக்கியாவும், சண்முகமும் கூட அவளை கேள்வியாய் பார்க்க, இதழினிக்கோ உள்ளுக்குள் உதற ஆரம்பித்து விட்டது.
“எருமை மாடு.. எந்த நேரத்துல என்ன கேள்வி கேட்குது பாரு” என்று உள்ளுக்குள்ளே அவளை திட்டிகொண்டவள்,
சட்டென்று அவள் கையிலிருந்த போனை புடுங்கியதோடு,
“எனக்கு எப்படிடி தெரியும்..? போன் கிடைக்கிற வரைக்கும் இந்த போன்-அ யூஸ் பண்ணிக்க சொல்லி மேம் கொடுத்தாங்க. நான் வாங்கிட்டு வந்தேன்.. மத்தப்படி இதுல என்ன இருக்குன்னுலாம் எனக்கு தெரியாது. ஏன் இந்த போனோட நம்பர் கூட எனக்கு தெரியாது. நானே போன்-அ மிஸ் பண்ண வருத்தத்துல இருக்கேன் .. நீ வேற அது யாரு..? இது யாருன்னு..? என்ன டார்ச்சர் பண்ணிட்டு இருக்க” என்று கோவமாக சொன்னவள்,
“சித்தி எனக்கு ரொம்ப பசிக்குது..” என்றாள் மேற்கொண்டு யாரும் இது குறித்து கேள்வி எழுப்பாமல் இருக்க, சூழ்நிலையை மாற்றும் விதமாக.
“ஏய் நீ படிக்கலையா..?” என்று கேட்டு ஆரண்யாவை அங்கிருந்து கிளப்பிய சண்முகம்,
இலக்கியாவை பார்த்து, “புள்ள தான் பசிக்குதுன்னு சொல்றால்ல… போ போய் தோசை ஊத்தி கொடு..” என்க,
இலக்கியாவும், “வா இதழினி” என்றவாறே உள்ளே செல்ல, இதழினியும் அவளை பின் தொடர்ந்து சென்றாள்.
சுட சுட முறுவலான தோசையுடன் தேங்காய் சட்னி வைத்து இதழினியிடம் இலக்கியா தட்டை கொடுக்க, அதை வாங்கியவளுக்கு இப்போது உண்ணும் எண்ணமே இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
ஏதோ நிலைமையை சமாளிக்கதான் அவள் பசிக்கிறது என்று சொன்னாலே தவிர அவளுக்கு துளியளவு கூட பசியில்லை. காரணம் நடந்த நிகழ்வுகள் கொடுத்த அதிர்ச்சியில் அவளின் பசி கூட மறுத்துதான் போயிருந்தது.
தோசையை தேங்காய் சட்னியில் பிசைந்தபடியே உண்ணாமல் அவள் இருக்க, அவளுக்கான அடுத்த தோசையை ஊத்தி எடுத்து வந்த இலக்கியா,
“என்ன நீ பசிக்குதுன்னு சொல்லிட்டு ஒரு வாய் கூட சாப்பிடாம இருக்க..? சாப்பிடு..” என்று சொல்லியவாறே கையோடு எடுத்து வந்த தோசையை அவள் தட்டில் வைக்க போக,
“ஐய்யோ.. சித்தி.. எனக்கு போதும். பிளீஸ் வேண்டாம்” என்றாள் தட்டை பின்னால் மறைத்துகொண்டு.
“இவ்வளோதானா உன் பசி..?” என்று கேட்டு முறைத்த இலக்கியாவிடம், அவள் விழிகளாலேயே கெஞ்ச,
“ப்ச்..” என்று சலித்துகொண்டவள், “என்னவோ போ.. இந்த காலத்து புள்ளைங்க சாப்பாடா சாப்பிடுதுங்க.. ஒரு தோசை, இரண்டு இட்லி-ன்னு சாப்ட்டா உடம்புல என்ன இருக்கும்..?”
என்று நொந்துகொண்டடியே இலக்கியா கிச்சனுக்குள் நுழைய, அவளும் அப்போதுதான் விதியே என்று முதல் வாய் எடுத்து வைத்தாள்.
வாயில் வைத்ததை அவள் மென்று கூட அவள் விழுங்கவில்லை அதற்குள் மீண்டும் போனில் அவளை அவன் அழைத்திருக்க, போன் சத்தம் கேட்டு தூக்கிவாரிப்போட்டவளுக்கு அப்போதுதான் நினைவிற்கு வந்தது வீட்டிற்கு போனதும் மெசேஜ் அனுப்ப சொல்லி அவன் சொன்னது,
“ஐய்யய்யோ..” என்று கைகளை உதறியவாறே அவசரஅவசரமாக போனை எடுத்து முதலில் சைலண்டில் போட்டவள், அவன் அழைப்பை ஏற்காமல், போன் வந்த எண்ணிற்கே “சார் ரீச்சிடு” என்று அனுப்ப,
“வாட் அபவுட் ரிங் போட்டோ..?” என்று பதிலுக்கு மேசேஜ் அனுப்புவான் என்று சற்றும் அவள் எதிர்பார்க்கவில்லை.
“விடமாட்டான் போலவே..” என்று சத்தமில்லாமல் முனகிக்கொண்டவளுக்கு, அதன் பின் ஏன் வேண்டா வெறுப்பாக கூட உணவு உள்ளே இறங்க போகிறது.
எங்கே அந்த மோதிரத்தை போட்டு ஃபோட்டா அனுப்பாவிட்டால் சொன்னது போல் வீட்டுக்கு வந்து விடுவானோ, என்ற பயத்தில், “அனுப்பறேன் சார்.” என்று பதிலுக்கு மெசேஜ் அனுப்பியவள், அடுத்து ஒட்டமும் நடையுமா தன் அறைக்குதான் ஓடினாள்.
அறையை முழுவதுமாக அலசி பார்த்த பின்னும் அவளுக்கு மோதிரம் கிடைத்தபாடில்லை.
“எங்க போச்சி..? இங்க நின்னுதானே தூக்கி போட்டேன்..” என்று யோசித்தவாறே மீண்டும் கட்டிலை அலசி ஆராய்ந்து கொண்டிருக்கும் போதுதான்,
“என்னக்கா நம்ம ரூம்-ஆ இது..?” என்று அறைக்கிடந்த கோலத்தை பார்த்து ஆச்சரியப்பட்டாவறே அவள் அருகில் வந்து நின்றாள் ஆரண்யா.
அவள் கேள்விக்கு பதில் சொல்லாமல் “நகருடி..” என்று சொல்லியவாறே அவளை கடந்து சென்ற இதழினி, பெட் ஷீட்களை உதற
அவளையே சில கணங்கள் பார்த்திருந்த ஆரண்யாவிற்கு அவள் எதையோ தேடுவது போல் மனதிற்கு தோன்ற, “எதையாவது தேடுறீங்களா..க்கா..?” என்றாள்.
“ம்.. ஆமாம்டி ஒரு மோதிரம்.. இங்கதான் கழட்டி வச்சேன்.. எங்க போச்சின்னு தெரியல..நீ பார்த்தியா..?” என்றவள் கேட்டுமுடிக்கும் முன்பே,
“இதுவா-க்கா..?” என்றவாறே தன் விரலில் அணிந்திருந்த மோதிரத்தை காட்டினாள் ஆரண்யா.
அவள் விரலிலிருந்த மோதிரத்தை பார்த்தவளுக்கு அப்போதுதான் உயிரே வந்தது போல் இருந்தது.
“ஏய்.. இந்த ரிங்தான்.. இதெப்படி உன்கிட்ட..?” என்று அவள் விரலிருந்த மோதிரத்தை பார்த்தவாறே இதழினி கேட்க,
“அதுவா..ஷால் பின் கழட்டும் போது பின் கீழ விழுந்துடுச்சி.. அத எடுக்க குனியும் போதுதான் கட்டிலுக்கு அடியில இந்த ரிங்க பார்த்தேன்..” என்று சொன்னவள்,
“ரிங் ரொம்ப அழகா இருக்குக்கா.. எந்த கடையில வாங்குன..?” என்று கேட்டவள் அறியவில்லை அது விலையுயர்ந்த டைமண்ட் ரிங் என்று.
“ப்ச்.. நான் வாங்குல டி.. இன்னைக்கு காலேஜ்-அ பிரைசா கொடுத்தாங்க..” என்றவள் அப்போதுதான் அவளிடமிருந்த மோதிரத்தை வாங்கி பார்த்தாள் அப்படி ஆறு லட்சத்திற்கு அந்த மோதிரத்தில் என்ன இருக்கிறது என்பது போல்.
மோதிரத்தின் நடுமத்தியில் பெரிய அளவிலான டைமண்டும், அதன் பக்கவாட்டில் சிறிய அளவில் டைமண்ட் கற்களும் பொறிக்க பட்டிருந்தது.
தங்கத்தில் பதிக்கப்பட்டிருந்த அந்த டைமண்ட் கற்கள் நீல நிற ஒளிக்கற்றைகளை உமிழ்ந்த வண்ணம் இருக்க, அந்த மோதிரத்தின் பிரமாண்டத்தை பார்த்து அவள் விழிகள் ஆச்சரியத்தில் விரியவே செய்தன.
அத்தோடு ஆறு லட்சமே இந்த மோதிரத்திற்கு குறைவு என்றுதான் தோன்றியது அவளுக்கு.
அவனுக்கு போட்டோ அனுப்பவேண்டும் என்பதற்காக அந்த மோதிரத்தை விரலில் அணிந்தவள், அப்போதுதான் ஆரண்யா இன்னும் இங்கேயே இருப்பதை கவனித்தாள்.
“உன் விரலுக்கு ரொம்ப அழகா இருக்குக்கா..” என்றவளை பார்த்து, “நாளைக்கு எக்ஸாம்-க்கு படிச்சி முடிச்சிட்டியா..?” என்றாள் இதழினி அவளை இங்கிருந்து வெளியேற்றும் விதமாக.
“லாஸ்ட் ஒன் லெசன் இருக்குக்கா” என்றவள் அவள் நினைத்தது போலவே அறையிலிருந்து வெளியேற, கதவை சாற்றி தாழிட்டவள் உடனடியாக அதை போட்டோ எடுத்து அவனுக்கு அனுப்பவும் செய்தாள்.
கிச்சனை சுத்தப்படுத்திவிட்டு வெளியில் வந்த இலக்கியாவின் பார்வையில் அவள் உண்ணாமல் வைத்துவிட்டு சென்ற தட்டு கண்ணில் பட,
“என்னாச்சி இந்த பொண்ணுக்கு..? பசிக்குதுன்னு சொல்லிட்டு ஒரு வாய் கூட சாப்பிடாம வச்சிட்டு போய்ட்டா..” என்று நினைத்தவருக்கு அவளின் பேச்சு, செயல், நடவடிக்கை எல்லாமே புதிதாகத்தான் இருந்தது.
போட்டவை பார்த்துவிட்டு பதிலுக்கு அவன் “குட்” என்று அனுப்ப, அதை பார்த்த பின் அவளுக்குள் இருந்த பதற்றம் பாதியளவு குறைந்தது போல் இருந்தது.
அறையை முன் போலவே ஒழுங்கு படுத்தி வைத்தவள், அதன் பின்னே உடைகளை எடுத்துகொண்டு குளிக்க செல்ல,
“இந்த நேரத்துலயா..?” என்றாள் இலக்கியா.
“ஆமா சித்தி.. உடம்பெல்லா ஒரு மாதிரி கசகசன்னு இருக்கு” என்றவள் அவளின் பதிலுக்கு கூட காத்திராமால் குளியலறைக்குள் நுழைந்திருக்க, இலக்கியாவிற்குதான் என்ன சொல்வதென்றே தெரியவில்லை.
அவன் கரம் பட்ட இடத்தையெல்லாம் தேய்த்து தேய்த்து குளித்தபின் தான் இதழினி மனதிற்கு சற்று நிம்மதியாக இருந்தது.
ஈரகூந்தலை துவட்டியபடியே நிலைக்கண்ணாடியில் தன் பிம்பத்தை பார்த்தவளுக்கு, உண்மையில் இது நான் தானா என்ற சந்தேகம் தான்.
காரணம் ஆரண்யா, ஹரண் மட்டுமல்ல தன்னிடம் பயிலும் மாணவ மாணவிகளிடம் கூட உயிரே போகும் நிலை வந்தால் கூட பொய் சொல்லகூடாது என்று படித்து படித்து சொன்னவளா இன்று வார்த்தைக்கு வார்த்தை பொய் சொன்னது என்று நினைக்கும் போதே அவளுக்கு தன்னையும் மீறிக்கொண்டு கண்கள் கலங்கிவிட்டன.
“எல்லாம் அவனால தான்.. அந்த ராஸ்கல்-லால தான்” என்று எப்போதும் போல அவன் மீது பழியை போட்டவளுக்கு தெரியவில்லை எப்படி தன்னையும், தன் போனையும் அவனிடமிருந்து மீட்பதென்று.
“பெருமாளே.. ஏன் தான் அவன் கிட்ட என்ன மாட்டிவிட்டு சோதிக்கிறீங்களோ..? அவன் போன்-அ எங்கண்ணு போய் நான் தேடுவேன்.. எப்போ அவன் போன்-அ நான் கண்டுபிடிக்கிறது..? எப்போ அவன் கிட்டேந்து என் போன்-அ நான் வாங்குறது..?” என்று தன்னை மீறிக்கொண்டு புலம்பியவளுக்கு தெரியவில்லை வந்திருக்கும் இந்த புது பிரச்சனைக்கு எப்படி வழி காண்பதென்று.
அவளின் ஆன்லைன் பரதநாட்டிய கிளாஸ் வேறு இதில் மாட்டிக்கொண்டிருக்க, அதற்கும் சேர்த்து யோசிக்க வேண்டிய கட்டாயம் அவளுக்கு.
கையிலிருக்கும் அவன் போனிலிருந்து வகுப்பு எடுக்கலாம் என்றாலோ… மாணவிகள் யாருடைய போன் நம்பரும் அவளுக்கு தெரியாது. எல்லாமே அவள் போனில்தான் இருக்கிறது.
அதற்காக போன் கிடைக்கும் வரை அவளால் வகுப்பிற்கு விடுப்பும் விட முடியாது. அப்படியே விடுவதாக இருந்தால் எத்தனை நாட்கள் விட முடியும்..? பணம் கட்டியவர்கள் வரிந்து கட்டிகொண்டு வந்துவிட மாட்டார்களா..?
“இப்போ நான் என்னதான் பண்றது..?” என்றவாறே படுக்கையில் சாய்ந்தவள் அவனிடமிருந்து போனை வாங்குவதற்காக எப்படிஎப்படியெல்லாமோ யோசித்து பார்த்துவிட்டாள்.




