நெஞ்சை பிடித்துகொண்டு அழுதவளுக்கு தாரிகாவிடம் தான் சொன்னது எப்படி செய்திதாளில் வந்தது என்பதுதான் இப்போது வரையுமே புரியவில்லை.
ஒருவேளை தாரிகா சொல்லியிருப்பாளோ என்று அவளை சந்தேகிக்க கூட இதழினியின் மனம் மறுத்தது.
காரணம் எத்தனையோ நெருக்கடியான சூழ்நிலைகளில் அவளுக்கு துணையாக இருந்தது தாரிகா மட்டும்தான்.
ஏன் ஒரு முறை எக்ஸாம் ஃபீஸ் கட்டவேண்டிய கடைசி நாளில் இதழினி ஃபீஸ்-ஐ மறந்து வீட்டிலேயே வைத்துவிட்டு வந்த போது தாரிகாதான் அவளுக்கும் சேர்த்து ஃபீஸ் கட்டினாள்.
அப்படிப்பட்டவள் நிச்சயம் சொல்லியிருக்க மாட்டாள் என்றுதான் இதழினியின் மனம் அடித்து சொன்னது.
தாரிகா இல்லையென்றால் வேறு யார் என்று யோசித்தவளுக்கு தலையே வெடிப்பது போல் இருக்க, தலையை பிடித்தபடி அமர்ந்திருந்தவளை தாரிகாதான் போனில் அழைத்திருந்தாள்.
அவள் அழைப்பை ஏற்ற இதழினி கணமே “சாரிடி இதழினி.. வெரி சாரி” என்றவள் சொல்ல, இதழினிக்குதான் ஒன்றுமே விளங்கவில்லை.
“ஏன்.. என்னாச்சி..?” என்றவள் கேட்டபோது,
“அன்னைக்கு என்ன உங்க வீட்டுக்கு கூட்டிட்டு வந்த என் அத்த பையன் ஒரு நியூஸ் ரிப்போர்ட்டர்டி. நீ சொன்ன எல்லாத்தையும் அவன் நியூஸ் பேப்பர்ல போட்டுட்டான். அந்த நியூஸ்-அ பப்ளிஷ் பண்ணதால பெரிய பிரச்சனை ஆகிடுச்சி இதழினி. அவன்-அ வேலை-அ விட்டும் தூக்கிட்டாங்க. இதுல இந்த இன்ஃபர்மேஷன் கொடுத்தது நீதான்னு வேற கை-அ காட்டி தொலைச்சிட்டான். இன்னைக்கு காலை-லதான் எல்லாத்தையும் என்கிட்ட சொன்னான். உனக்கு எதும் பிரச்சனை இல்லையே இதழினி..?” என்றவளின் கேள்விக்கு அவள் விழிகளிலிருந்து கண்ணீர்தான் பதிலாக வந்தது.
பக்கத்தில் யார் இருக்கிறார் என்று தெரியாமல் தன் இஷ்டத்திற்கு கத்தியது எவ்வளவு பெரிய தவறு என்று அவள் புத்திக்கு இப்போது புரிந்தது.
இப்போது புரிந்து என்ன பயன்..? அதான் நடக்ககூடாதவைகள் எல்லாம் அவளுக்கு நடந்துவிட்டதே.
நேற்றுமுதலே அவள் மண்டையை குடைந்து கொண்டிருந்த கேள்விக்களுக்கு இப்போது பதில் கிடைத்திருக்க, அவளால்தான் இந்த பிரச்சனைக்கெல்லாம் காரணமானவன் மீது கோவப்பட முடியவில்லை.
கோவப்படுவதால் மட்டும் என்ன ஆகிவிட போறது அவளுக்கு நடந்தது நடக்காதது ஆகிவிடபோகிறதா..?
செய்த தவறுக்காக அவனுக்காவது வேலைதான் பறிபோனது.. ஆனால் செய்யாத தவறுக்காக அவளுக்கு கொடுக்கப்பட்ட தண்டனை அதிகப்படி அல்லவா.
தனக்கு நடந்த அவலம் குறித்து தாரிகாவிடம் கூட சொல்ல அவள் மனம் விரும்பவில்லை.
எதுவும் சொல்லாமல் அவள் அமைதியாகவே இருக்க, “சொல்லு இதழினி.. உன்ன யாராவது எதாவது கேட்டாங்களா..?” என்றாள் மீண்டும் தாரிகாவே.
வழிந்தோடிய கண்ணீரை அழுந்த துடைத்துகொண்டவள், “இல்ல தாரி” என்று துக்கத்தை விழுங்கிகொண்டு சொல்ல,
அதன் பின்னே தன் பாட்டி இறந்த தகவலை சொன்னவள், ஆண்டுவிழா அன்று தான் தன்னால் வர முடியும் என்ற விவரத்தையும் சொல்லிவிட்டுதான் போனை வைத்திருந்தாள் தாரிகா.
உடல் நலம் சரியில்லாததால் இன்று கல்லூரிக்கு போக வேண்டாம் என்று இலக்கியா சொல்ல, இதழினியும் இருந்த மனநிலைக்கு கல்லூரிக்கு விடுப்பு சொல்லிவிட்டாள்.
அழுதழுது வீங்கிபோயிருந்த தன் முகத்தை மீண்டும் கண்ணாடியில் பார்த்தாள். மீண்டும் அவள் கண்கள் அவள் அதரங்களின் மீதே படிந்து நிற்க,
பின் என்ன நினைத்தாளோ டவல் கொண்டு தன் அதரங்களை அவள் அழுத்தி துடைக்க,
இனி இது குறித்து யோசிக்க கூடாது என்ற முடிவுக்கு வந்த ரிஷப்நந்தனும், டிஸ்யூ கொண்டு தன் அதரங்களை அழுந்த துடைத்தான் என்னவோ அவள் கட்டாயபடுத்தி அவனுக்கு முத்தம் கொடுத்தது போல்.
வாட்ரோப்பில் இருக்கும் தன் ஆடையை எடுப்பதற்காக படுக்கையை சுற்றி சென்றவனின் கால்கள் எதிலோ மாட்டி தடுமாற, குனிந்து என்னவென்று பார்த்தான்.
ஏதோ டேக் போல் இருக்க அதை கையில் எடுத்து பார்த்தான் ரிஷப். அது இதழியின் கல்லூரி ஐ.டி கார்டு தான்.
நேற்று நடந்த களேபரத்தில் அவள் கழுத்திலிருந்த ஐ.டி கார்ட் அறுந்து விழுந்து இருக்க, செல்லும் அவசரத்தில் அவளும் அதை கவனிக்கவில்லை. அதுதான் இப்போது அவன் கால்களில் மாட்டியது கூட.
கொஞ்சமும் புன்னகை இல்லாமல் முகத்தை உர்ரென்று வைத்தபடி ஐ.டி கார்டில் அவள் புகைப்படம் இருக்க, அதை பார்த்த மாத்திரத்திலேயே ரிஷப் நந்தனுக்கு சிரிப்பு வந்துவிட்டது.
“இவளுக்கு சிரிக்கவே தெரியாது போல” என்று சொல்லிக்கொண்டே அதிலிருந்த விவரங்களை படித்தவன், ஐ.டி கார்டை திருப்பி பார்த்தான்.
ஐ.டி கார்டுக்கு பின் ஏதோ இருப்பது போல் இருக்க, டேக்கிலிருந்த ஐ.டி காட்டை வெளியில் எடுத்தவனின் இதழ்கள் மீண்டும் தன்னையும் அறியாமல் புன்னகைத்தன அதிலிருந்த பெருமாள் புகைப்படத்தை பார்த்து.
அதனோடு நான்காக மடிக்கப்பட்டிருந்த நூறு ரூபாய் நோட்டும் ஒன்று இருக்க, அதையும் பிரித்து பார்த்தான்.
அதில் ‘மிஸ் யூ அம்மா’ என்று எழுதப்பட்டு இருக்க, யோசனையோடே ஐ.டி கார்டோடு சேர்த்து அனைத்தையும் டேக்-கில் வைத்தவன், பின் என்ன நினைத்தானோ உடையை மாற்றிய கையோடு கார் சாவியையும் எடுத்து கொண்டு கீழே சென்றான்.
ஒரு மணிநேரம் கழித்தே அவன் ஃபாளாட்டிற்கு திரும்ப, கவினும் அவன் வரவைதான் எதிர்பார்த்து காத்துகொண்டிருந்தான்.
காரணம் இத்தனை வருடங்களில் கவினுக்கு முன் ரிஷப் எழுந்ததாக சரித்திரமே இல்லை.
எழுந்ததோடு சொல்லாமல் கொள்ளாமல் அவன் வெளியில் சென்றிருப்பது கவினுக்குமே ஆச்சரியம்தான்.
அனைத்திற்கும் மேல் அவன் அழைப்பை அவன் ஏற்காமல் இருக்க, அது இன்னும் கவினுக்கு ஆச்சரியத்தைதான் ஏற்படுத்தியிருந்தது.
அவன் வரவை எதிர்நோக்கி அவன் காத்துகொண்டிருக்கும் போதுதான் ரிஷப்-ம் கதவை திறந்து கொண்டு உள்ளே நுழைந்தான்.
நுழைந்த மாத்திரத்திலேயே “எங்க டார்லிங் போய்ட்டு வர..?” என்று கவின் வினவ,
“ம்… ஜாகிங்..” என்றவாறே அவன் அமர்ந்திருந்த சோஃபாவிலேயே சாய்ந்தவனின் கையிலிருந்த கார் கீ-யை கவினும் கவனிக்கவே செய்தான்.
“ஜாகிங் எப்படி கார்லே போய்ட்டு வந்த போல” என்றவனை ரிஷப் முறைக்க,
“இல்ல ஸ்வெட் இல்லாம ஃப்ரஷ்-ஆ இருக்கியே அதான் கேட்டேன்” என்றான் அவனும் விடாமல்.
இனியும் இவனிடம் மறைப்பதில் சரியன்று நினைத்த ரிஷப், தன் பாக்கெட்டில் இருந்த ஐ.டி கார்டை எடுத்து அவனை நோக்கி வீச, அதை கேட்ச் பிடித்துகொண்டவனோ, என்ன என்பது போல் அதை பார்த்தான்.
ஐ.டி கார்டில் அவளின் புகைபடத்தையும், பெயரையும் பார்த்த மாத்திரத்திலேயே கவின் இதழ்களில் குறுநகை மின்ன,
“கவின் அப்படி சிரிக்காத..” என்றான் கடுப்பாக ரிஷப்.
“ஓகே” என்று சிரிப்பை விழுங்கியபடி சொன்னவன், “எனக்கு தெரியும் டார்லிங் நேத்து நீ பண்ண வேலைக்கு கண்டிப்பா சிஸ்டர்-அ தேடிப்போவன்னு.. ஆனா இவ்வளோ” என்றவன் சொல்ல வந்ததை முடிக்கும் முன்பே,
“த ச்சீ… உன் கற்பனையை அதோட நிறுத்திக்கோ” என்றவன் நன்றாக அவன் புறம் திரும்பி அமர்ந்து,
“நேத்து அவ ஐ.டி கார்ட்-அ இங்கயே விட்டுட்டு போய்ட்டா போல.. அது காலைல தான் என் கால்-ல மாட்டுச்சி… ஐ.டி கார்ட் இல்லன்னா காலேஜ்-ல அலோ பண்ணமாட்டாங்களேன்னு கொண்டு போய் கொடுக்க போனேன். போதுமா..” என்றான் பொறுமையை இழுத்து பிடித்து கொண்டு ரிஷப்.
அவன் கூறியதை கேட்டு, “பாயிண்ட் நோட்டட்” என்ற கவின்,
“ஆனா இத நீ பவுன்சர் கிட்ட கொடுத்து கொடுக்க சொல்லியிருக்கலாமே..?” என்று கேட்ட போது,
“ஆ.. கொடுத்திருக்கலாம்தான்..” என்று இழுத்தவன், “ஆக்சுவலி.. அந்த பொண்ணுக்கிட்ட நான் ஒரு விஷயம் சொல்லணும். அதான் நானே போனேன்” என்றவனை பார்த்து மெலிதாய் சிரித்த கவின்,
“அந்த விஷயம் ஐ லவ் யூ.. தன” என்று முடிக்கும் முன்பே,
“செருப்பு” என்றான் கோவத்தில் ரிஷப்.
“ஒகே ஒகே.. கூல்” என்றவன் “அப்புறம் ஏன் நீ இத கொடுக்கல.?” என்றபோது,
ரிஷப்போ “அவ வரல.” என்றான் கோவத்தில் பற்களை கடித்தவாறே.
“அவ ஏன் வரல..?” என்று கவினும் விடாமல் கேட்க,
“என்னக்கேட்டா எனக்கு எப்படிடா தெரியும்..? நானே அவ காலேஜ் பஸ் போயும் ஒரு மணிநேரம் வெயிட் பண்ண கடுப்புல இருக்கேன். நீ வேற கேள்வி மேல கேள்வி கேட்டு என்ன இரிட்டேட் பண்ணாத” என்றவனின் கரமோ டீபாய் மீதிருந்த மேகசினை எடுத்து புரட்ட ஆரம்பித்திருக்க. கவினின் பார்வை இன்னும் அவன் மீதேதான் இருந்தது.
“ஆக்சுவலி எனக்கு ஒன்னு புரியல டார்லிங்…” என்றவனை இப்ப என்னதாண்டா உன் பிரச்சனை என்பது போல் ரிஷப் பார்க்க,
“நீ ஏன் இப்போ இவ்வளோ கோவப்படுற..? ஐ.டி கார்ட்-அ கொடுக்க முடியலன்னா..? இல்ல…” என்று இழுத்தவனை ரிஷப் புருவ மத்தியை சுருக்கி பார்க்க,
“இன்னைக்கு சுவிங்கம் மிஸ் ஆகிடுச்சின்னா..?” என்று இரட்டை அர்த்ததில் கேட்டதோடு நில்லாமல் அவன் சிரிக்கவும் செய்ய, கோவத்தில் கையிலிருந்த மேகசினை தூக்கி அவன் முகத்தில் எறிந்தவன்,
“டார்லிங்-னு கூட பார்க்க மாட்டேன்.. அடிச்சி வாய ஒடச்சிடுவேன் கவின்” என்று ஆள்காட்டி விரலை நீட்டி எச்சரிக்க, கவினுக்கு அவன் கோவம் கூட சிரிப்பைதான் உண்டாக்கியது.
ரிஷப்பை கோவப்படுத்தி பார்ப்பதில் கவினுக்கு எப்போதுமே ஒரு அலாதி விருப்பம் உண்டு. அதிலும் அவனுக்கு பிடிக்காத பெண்களோடு அவனை சேர்த்து வைத்து கலாய்ப்பதில் அவனுக்கு ஒரு இன்பம்.
அதைத்தான் இப்போதும் அவன் செய்து கொண்டிருக்கிறான். ஏன் சில சமயங்களில் இது முற்றி கை கலப்பில் கூட சென்று முடிந்தது உண்டு.
இது எப்போதும் அவர்களுக்குள் நடக்கும் ஒன்று தான். இன்று அது இதழினியை வைத்து நடந்து கொண்டிருந்தது.
அவனை நன்கு புரிந்ததால் தான் ரிஷப் காலையில் அவனிடம் சொல்லாமல் கொள்ளாமல் கிளம்பி சென்றது கூட.
இருந்தும் அவன் மோப்பம் பிடித்துவிட, இனி மறைப்பது வீண் என்றுதான் ரிஷப் அவனிடம் உண்மையை சொன்னது.
சும்மாவே பெண்கள் விஷயத்தில் அவனை வைத்து செய்பவன் இப்போது விட்டுவிடுவானா என்ன..?
“ஓ அவ்வளோ ஆயாச்சா.. அப்போ நானும்” என்றவாறே இருக்கையிலிருந்து எழுந்த கவின் பால்கனிக்கு செல்ல, செல்லும் அவனையே கோவமாய் பார்த்து கொண்டிருந்தான் ரிஷப்.
பால்கனியில் சென்று நின்று திரும்பி ரிஷப்பை ஒரு பார்வை பார்த்துவிட்டு தொண்டையை கனைத்த கவின், “ஹலோ எவ்ரி ஒன் நான் பேசுறது உங்க எல்லாருக்கும் கேட்குதா..?” என்று கத்தி கேட்டதோடு,
“உங்க எல்லாருக்கும் நம்ம ரிஷப் பத்தி ஒரு பிரேக்கிங் நியூஸ் சொல்றேன் கேட்டுக்கோங்க. உலக வரலாற்றில் முதல் முறையாக நம்ம ரிஷப் ஒரு பொண்ண தேடி….” என்றவனை மேற்கொண்டு சொல்லவிடாமல் பின்னாலிருந்து அவன் வாயை மூடியிருந்தான் ரிஷப்.
அவன் வாயை மூடியவாறே வலுக்கட்டாயாமாக உள்ளே இழுத்து சென்றவன் பின்னாலிருந்த கட்டிலில் இடித்து விழ, கவினும் அவன் மேலேயே விழுந்திருந்தான்.
தன் மீது விழுந்தவனை கீழே தள்ளிய ரிஷப், அவன் மீது ஏறி அமர்ந்து கவின் கன்னத்தில் ஒரு குத்து விட, கவினும் அவனை கீழே தள்ளி அவன் போலவே அவன் கன்னத்தில் ஒன்று விட்டான்.
இப்படியே இருவரும் உருண்டு புரண்டு அடித்துகொண்டதில் இருவருக்குமே ஒரு கட்டத்தில் முடியாமல் போக, மூச்சி இறைக்க விட்டத்தை பார்த்தப்படி படுத்துகொண்ட இருவருமே சற்று முன் நடந்த நிகழ்வை எண்ணி சத்தம் போட்டு சிரித்து கொண்டனர்.
கிட்டத்தட்ட இதழினியும் ஆண்டுவிழா அன்றுதான் கல்லூரிக்கு சென்றிருந்தாள்.
அனைவரும் புடவையில் வர வேண்டும் என்று முன்னமே சொல்லியிருக்க, பிரம்மாண்டம் இல்லாமல் வெகு சாதரணமாக சில்க் காட்டன் புடவையைதான் கட்டியிருந்தாள் இதழினி.
அவர்கள் இருவரும் எப்போது வருவார்கள் என்று மாணவிகளோடு சேர்ந்து ஆசிரியர்களும் ஒருவித எதிர்பார்ப்போடு கல்லூரி வாயிலில் காத்திருக்க, இதழினி மட்டும் ஆண்டுவிழா நடக்க ஏற்பாடு செய்திருக்கும் இடத்தில் சென்று அமர்ந்து கொண்டாள்.
விழா நடந்து முடியும் வரை எந்த காரணம் கொண்டும் அவர்கள் முன்னால் சென்று நின்று விட கூடாது என்ற வேண்டுதல் வேறு அவளுக்குள் ஓடி கொண்டிருந்தது.
நேரம் ஆக ஆக என்னவென்றே தெரியாமல் உள்ளுக்குள் ஒருவித பயமும் பதற்றமும் அவளுக்குள் அதிகரிக்க, பெருமாள் நாமத்தை உச்சரித்தபடியே அமர்ந்திருந்தாள் இதழினி.
அதிகம் நேரம் அவர்களை காக்க வைக்காமல் சொன்னநேரத்திற்கு முன்பாகவே கல்லூரிக்கு வருகை புரிந்திருந்தனர் ரிஷப்பும், கவினும்.
வெள்ளை நிற ஆர்க் கட் டீ-ஷட், புளூ நிற ஜீன் மற்றும் கருப்பு கூலர் அணிந்து இருவரும் கேஷ்வலாக வந்திருக்க, இருவரையும் பார்த்து சத்தம் எழுப்பிய மாணவிகளை பார்த்து கையசைத்தவாறே காரிலிருந்து இறங்கினர் இருவரும்.
அவர்களின் பிரின்சி வாயிலுக்கே வந்து பூச்செண்டு கொடுத்து அவர்களை வரவேற்று உள்ளே அழைத்து செல்ல, மற்ற ஆசிரியர்களோ மாணவிகளை அழைத்து கொண்டு விழா நடக்கும் இடத்திற்கு சென்றனர்.
ஸ்டூடண்ட் சேர் பர்சன் என்ற முறையில் அவர்களை வரவேற்கும் பொருட்டு, “ஹாய் சார்.. ஐம் தாரிகா. ஸ்டூடண்ட் சேர் பர்சன்” என்று தன்னை அறிமுகப்படுத்தி கொண்டவள், அவர்களை வரவேற்கும் விதமாக கையிலிருந்த பூங்கொத்தை நீட்ட,
அதை வாங்காமல் கூலரை கழட்டி ஏகத்துக்கும் தாரிகாவை ஒரு பார்வை பார்த்த ரிஷப், “என்ன மீட் பண்ணது நீ இல்லையே..?” என்றான்.
அவன் கேள்வியால் முதலில் தடுமாறியவள், “ஆ.. ஆமா சார்.. உங்கள மீட் பண்ணது என் ஃப்ரண்ட் இதழினி. ஆக்சுவலி அன்னைக்கு..” என்று ஆரம்பித்தவளை மேற்கொண்டு பேசவிடாமல்,
“கால் ஹர்” என்றவன் சொல்ல, தாரிகா மட்டும் அல்ல அவளின் பிரின்சி கூட ஒரு கணம் தடுமாறித்தான் போனார்.
அவளின் தடுமாற்றத்தை கவனித்தவன், “சொன்னது புரியலையா.. கால் ஹெர்” என்று கடைசி வார்த்தையை சற்று அழுத்தி சொல்ல, அவளோ இப்போது பிரின்சியை பார்த்தாள்.
“போ.. போய் கூட்டிட்டு வா..” என்று பிரின்சியும் வேறு வழியின்றி சொல்ல, அவளை அழைத்து வரும் பொருட்டு அங்கிருந்து ஓட்டமும் நடையுமாக கிளம்பினாள் தாரிகா.