மகனுக்கு எப்படியாவது திருமணம் செய்ய வேண்டும் என்று ஆசைஆசையாய் காத்திருந்த சுமதிக்கு அவன் செயல் அதிர்ச்சிதான். அவன் சொன்னது போல் இன்ப அதிர்ச்சி அல்ல.. பேரதிர்ச்சி…
அந்த பேரதிச்சியையும் ரிஷப் நந்தன் அழகாக கையாண்டு கொண்டிருந்தான் தன் செயல்களால்.
“ம்மா.. இதழ்-க்கு ஏற்கனவே உடம்புக்கு முடியல ம்மா.. அவ ஹெல்த் இருக்கற கண்டிஷனுக்கு அவளால ரொம்ப நேரம்-லா இப்படியே நின்னுட்டு இருக்க முடியாது ம்மா..” என்று அவரின் கோவத்தை கொஞ்சமும் கண்டுகொள்ளாமல் சொன்னவன்,
“சீக்கரம் ஆலம் எடுங்கம்மா..” என்று அவசரப்படுத்த வேறு செய்ய, ‘இவன நான் தான் பெத்தனா..?’ என்று தன்னிடமே கேட்டுகொண்டார் சுமதி.
பின் சுதாகரன் தான் “செல்வி..” என்று அவர்கள் வீட்டு பணிப்பெண்ணை அழைத்து ஆலம் எடுத்துவர சொல்ல, அவளும் ஆலத்தட்டோடு சுமதி முன் வந்து நின்றாள்.
அதை வாங்காமல் அப்போதும் சுமதி அவனை முறைத்தவாறே நின்றிருக்க, பின் சுதாகரன் தான் செல்வியிடமிருந்த ஆலம் தட்டை வாங்கி சுமதியிடம் கொடுத்து ஆலம் எடுக்க சொல்ல அதன் பின் அவர் வீம்பு பிடிக்கவில்லை.
அவனை முறைத்தவாறே ஆலம் சுற்றி இருவர் நெற்றியிலும் பொட்டு வைத்தவர், “ம்… உள்ள வாங்க” என்க,
அவள் கரத்தை பிடித்துகொண்டவன், “வலதுகால்-அ எடுத்து வச்சி உள்ள வா இதழ்” என்று சொல்லியபடி அவளை உள்ளே அழைத்து செல்ல,
கல்யாணமே வேண்டாம் என்று சொன்னவனா.. இப்படியெல்லாம் பேசுறான் என்ற அதிர்ச்சிதான் சுமதிக்கு.
இதில் அவன் அவரை கடந்துசெல்லும் போதே “என்ன இதுதான் சந்தர்ப்பம்-ன்னு உன் புருஷன் ஸ்கோர் பண்ண பார்க்குறாராக்கும்..?” என்று அவர் காதை அவன் கடித்துவிட்டு செல்ல,
பதிலுக்கு “டேய்..” என்று கண்டித்தவரின் வார்த்தைகளை காதில் வாங்காமல் அவளை அழைத்து கொண்டு அவன் உள்ளே செல்ல, சுமதியோ கையிலிருந்த ஆலம் தட்டை செல்வியிடம் கொடுத்திருந்தார் அதை வெளியில் ஊற்றும் பொருட்டு.
அவர்களை ஒட்டியபடியே உள்ளே சென்ற கவினை சுமதி கொலைவெறி தாக்குதலோடு பார்க்க,
ஐய்யோ அம்மா நான் இல்ல.. என்பது போல் வேக எட்டுகளுடன் ரிஷப்பிடம் சென்று நின்றுகொண்டான்.
அவளை அழைத்து கொண்டு உள்ளே சென்றவன், “ம்மா..” என்று சுமதியை அழைத்து,
“அதுதானே பூஜை ரூம்..?” என்று ஒரு அறையை சுட்டி காட்டி கேட்டவனை இதழினி மட்டும் அதிர்ந்து பார்க்கவில்லை அவனின் பெற்றோரும்தான்.
காரணம் இத்தனை வருடங்களில் பெயருக்கென்று கூட அவன் அந்த அறைபக்கம் சென்று அவர்கள் பார்த்தது கிடையாது. ஏன் எப்போதாவது பூஜை புனஸ்காரம் என்று அழைத்தால் கூட “எனக்கு நம்பிக்கையில்லை” என்று ஒரே வார்த்தையில் முடித்துவிடுவான்.
அதனாலே அவர்களும் அவனை கட்டாயபடுத்தியது இல்லை.
அப்படிப்பட்டவன் இன்று இப்படி கேட்டால் யாருக்குதான் அதிர்ச்சி வராது.
அவர் தன்னை அதிர்ச்சியோடு பார்ப்பதை கவனித்தவன், “நீங்க ஏன்-ம்மா இப்போ இன்ஸ்டால்மெண்ட்-ல அதிர்ச்சியாகிட்டு இருக்கீங்க..?” என்று கேட்டுவிட்டு அவன் நகைக்கவும் செய்ய,
“யாரு நான் இன்ஸ்டால்மெண்ட்-ல அதிர்ச்சியாயிட்டு இருக்கனா..?” என்பது போல் அவனை முறைத்து பார்த்தார் சுமதி.
“டேய் ஏண்டா நீ வேற.. எரியறதுல எண்ணை-அ ஊத்திக்கிட்டு இருக்க.. நீ பாட்டுக்கு வாய் இருக்கேன்னு வக்கனையா பேசிட்டு போய்டுவ.. அப்புறம் நான் தான் நீ பேசுனதுக்கெல்லாம் சேர்த்து வாங்கி கட்டிகணும்.” என்று அவன் காதில் முனுமுனுத்த கவின்,
“அதுதாண்டா பூஜை ரூம். போடா” என்று சொல்ல அவனும் அவளை அழைத்து கொண்டு பூஜை அறைக்குள் நுழைந்தான்.
“இதழ் நீ அடிக்கடி பெருமாள்-ன்னு சொல்லுவியே.. அவர் இவர்தானே..” என்று அந்த பூஜை அறையில் நடுநாயகமாக பெரிய அளவில் மாட்டப்பட்டிருந்த புகைபடத்தை பார்த்து கேட்டவன், தீப்பெட்டியை அவள் கையில் கொடுத்து விளக்கை ஏற்ற சொல்ல, அவளும் வேறு வழியின்றி விளக்கை ஏற்றினாள்.
எப்போது விளக்கு ஏற்றினாலும் மனதிற்குள் காயத்ரி மந்திரத்தை சொல்லிகொண்டே விளக்கு ஏற்றுபவள், இன்று அப்படி எதுவும் சொல்லவில்லை.
ஏன் அவளுக்கு பிடித்தமான பெருமாள் படத்தை பார்த்து அவள் வணங்ககூட இல்லை.
அவள் விருப்பமில்லாமல் சகலமும் அவள் வாழ்க்கையில் நடந்தேறியிருக்க இனி என்ன வேண்டுவது என்ற விரக்தி அவளுக்குள்.
ஸ்ரீ ராமசந்திரனை வேண்டியவளிடம் போய் இராவணனை கொடுத்திருக்கும் கடவுளிடம் இனி வேண்ட அவளுக்கு என்ன வேண்டுதல் இருக்கிறது.
அந்த பெரிய பெருமாள் படத்தை பார்த்தவளுக்கு விழிகள் கலங்கிவிட்டன.
அத்தோடு, “ஏன் பெருமாளே இப்படி பண்ணீங்க..?” என்று சத்தம்போட்டு கத்தி அழ வேண்டும் போல இருந்தது.
யாரும் அறியாமல் துளிர்த்த விழிநீரை துடைத்துகொண்டவள் தன்னருகில் இருந்தவனை பார்த்தாள்.
கடவுளே இல்லையென்று சொல்பவன் விழிகளை மூடியபடி நின்றிருக்க, அவனை பார்த்த மாத்திரத்திலேயே ‘அனைத்திற்கும் காரணம் இவன் தானே’ என்று அவளுக்கு கண்களை கரித்துகொண்டு வர, சட்டென்று தலையை தாழ்த்தி கொண்டாள் இதழினி.
கண்களை திறந்தவன் மீண்டும் “ம்மா..” என்று சுமதியை அழைக்க,
“இப்ப என்ன டா..?” என்றார் அங்கிருந்த படியே சுமதியும் பதிலுக்கு.
“வந்து ஆசீர்வாதாம் பண்ணுங்க” என்று அவனும் அங்கிருந்தபடியே சொல்ல,
“இவன” என்றவாறே கோவமாக அங்கிருந்து நகர முற்பட்ட சுமதியின் கரத்தை பற்றி தடுத்த சுதாகரனோ,
“ஆசீர்வாதம் தானே கேட்குறான்.. வா பண்ணுவோம்” என்று சொல்ல,
“ஏங்க நீங்களுமா..?” என்று அதிர்ந்து கணவரை பார்த்து கேட்டவர்,
“நம்மக்கிட்ட சொல்லாம கொள்ளாம கல்யாணம் பண்ணிட்டு வந்து இருக்கான்.. அவனுக்கு போய் ஆசீர்வாதம் பண்ண சொல்றீங்க..?” என்று எங்கேயோ பார்த்தபடி சொல்ல, சுமதியிம் மோவாயை பிடித்து தன்னை பார்க்க வைத்த சுதாகரன்,
“மிஸ்ஸஸ் சுதாகரன் அவன் வேணும்னா உன்ன ஏமாத்தியிருக்கலாம்.. ஆனா நீ அவன் மேல கோவமா இருக்கற மாதிரி என்ன ஏமாத்தணும்னு ட்ரை பண்ணாத.. உன் முகத்த பார்த்தாலே தெரியுதுடி உனக்கு நடிக்க சுத்தமாவே வரலன்னு.” என்று சொன்னவரின் கரத்தை சுமதி வேகமாக தட்டிவிட,
“இப்போ எதுக்கு இந்த டிராமா..? நான் அவன்-அ எதுவும் சொல்லிட கூடாது. அதானே…” என்று அவர் மனதை படித்தவர் போல் சுதாகரன் கேட்டபோது, சுமதிக்கோ உள்ளுக்குள் ஐய்யோ என்ற உண்ரவுதான்.
தன்னிடம் சொல்லாமல் கொள்ளாமல் திருமணம் செய்துகொண்டவன் மீது சுமதிக்கும் கோவம் இருக்கிறதுதான்.
இருந்தாலும் எங்கே இதை காரணம் காட்டி வெகு வருடங்கள் கழித்து வீட்டிற்கு வந்திருப்பவனிடம் சுதாகரன் கோவத்தில் எதாவது சொல்ல போய் அப்பனும் மகனும் மீண்டும் முடிக்கொண்டு நின்று விடகூடாதே.. அதனால் தான் இம்முறை சுமதி முந்திகொண்டார்.
கணவரின் சம்மதத்தோடு அனைத்தையும் அவனுக்கு செய்ய வேண்டும் என்றுதான் சுமதி ஆலம் எடுக்காமல் முறுக்கிக்கொண்டு நின்றது கூட.
“ஐய்யய்யோ அவன் சொல்றமாதிரி எனக்கு நடிக்கவரலதான் போல. இந்த மனுஷன் வேற கரெக்ட்டா மோப்பம் புடிச்சிட்டாரே.. இப்ப எதையாவது சொல்லி நான் இவர சமாளிக்கணுமே.. இல்ல இந்த மனுஷன் காலத்துக்கும் இதையே சொல்லி சொல்லி காட்டுவாரு” என்று உள்ளுக்குள் நினைத்தவர்,
“ஏங்க என் கோவத்த பார்த்தா உங்களுக்கு நடிக்கறமாதிரியா இருக்கு…?” என்று விழிகளை பெரிதுபடுத்தி உருட்டி அவர் கேட்ட தோணியில்,
சுதாகரனோ, “இல்ல சிரிக்கமாதிரி இருக்கு..” என்றார் மென்சிரிப்புடன்.
அதேநேரம் ”ம்மா.. “ என்று பொறுமையை இழுத்துபிடித்துகொண்டு மீண்டும் அவன் அவரை அழைத்திருக்க,
“இவன் வேற… இந்த ஆளுகிட்ட நான் மாட்டிகிட்டு முழிக்கிறது தெரியாம..? ம்மா.. ம்மா-ன்னு..” என்று உள்ளுக்குள் புலம்புவதாக நினைத்து சுதாகரன் காதில் விழும்படி புலம்ப,
“என்னடி பொசுக்குன்னு என்ன இந்த ஆளு-ன்னு சொல்லிட்ட..?” என்றார் அதிர்ச்சியோடு.
“ஐய்யய்யோ..” என்று பதற்றத்தோடே கைகளை உதறியவர், “மனசுக்குள்ள சொல்றதா நினைச்சி இப்படி வெளிப்படையா சொல்லி தொலைச்சிட்டேனே.. எதையாவது சொல்லி சமாளி சுமதி” என்று தனக்குதானே சொல்லிகொண்டவர்,
“ஏங்க… அதெல்லாம் கோவத்துல அப்படிதாங்க வரும்.” என்று சம்மந்தமே இல்லாமல் எதையோ சொல்லி சமாளித்தவர்,
“ஆமாங்க நடிச்சேன் தான். அதுக்காக அவன் பண்ணது சரின்றது போல அவன் முன்னாடி பல்ல காட்டிக்கிட்டு நிற்க சொல்றீங்களா..? நான் அவன் கிட்ட கொஞ்சம் அப்பிடி இப்படி-ன்னுதான் இருப்பேன்.. நீங்க எதுவும் கண்டுக்காதீங்க” என்றவர்,
“வாங்க புள்ளைங்க ரொம்ப நேரமா வெயிட் பண்ணிட்டு இருக்காங்க.. ஆசீர்வாதம் பண்ணிட்டு வருவோம்” என்று சொல்லிவிட்டு பூஜை அறை நோக்கி வேக எட்டுகளுடன் செல்ல,
“நல்ல புள்ள நல்ல அம்மா..” என்றாவாறே சுதாகரனும் அவர் பின்னால் சென்றார்.
இருவர் காலிலும் விழுந்து இருவரும் ஆசீர்வாதம் வாங்கி கொள்ள, அந்த அழகிய நிகழ்வை தன் செல்போனில் படமெடுத்து கொண்டான் கவின்.
அவளோடு ஹாலுக்கு வந்தமரந்தவன், அடுத்து ஏதோ சொல்ல வாயெடுக்கவும், செல்வி பாலோடும் பழத்தோடும் வந்து நிற்கவும் சரியாக இருந்தது.
செல்வியின் கையில் இருந்த பாலையும் பழத்தையும் பார்த்தவன், “நீ தான் செல்வி எல்லாத்தையும் கரெக்ட்டா பண்ற“ என்று மகிழ்ச்சி பொங்க சொன்னவன்,
“இந்தமாசத்துலேந்து உனக்கு மூவாயிரம் இன்கிரீமெண்ட்” என்று சொல்ல செல்விக்கோ வாயெல்லாம் பல்லாகி போனது.
“ம்..” என்று செல்வியை ஓரபார்வையால் முறைத்த சுமதி, இப்போது அவனை பார்த்து “டேய் அவளுக்கு சம்பளம் கொடுக்கறது நானு..” என்றார் யாரைகேட்டு இன்கிரீமெண்ட் மூவாயிரம் என்று சொன்னாய் என்பது போல்.
“சரி.. மேல மூவாயிரம் நான் தரேன்.” என்று சிரித்துகொண்டே பிரச்சனைக்கு சுமூகமாக தீர்வு சொன்னவன்,
“ம்மா.. சீக்கரம் பாலையும் பழத்தையும் உங்க கையால ஊட்டிவிடுங்க-ம்மா” என்று இதற்கும் சுமதியை அவன் அவசரப்படுத்த,
“அட அவசரத்துக்கு பொறந்தவனே..” என்று உள்ளுக்குள் அவனை நிந்தித்து கொண்ட சுமதி,
“ம்.. இந்த வியாக்கானம்-லாம் தெரியற துரைக்கு அம்மா அப்பா சம்மதத்தோட நாள் நட்சத்திரம் பார்த்துதான் கல்யாணம் பண்ணனும் மட்டும் தெரியலையாக்கும்.” என்று கிடைத்த கேப்பில் கேட்டுவிட,
அவனோ “அதுக்குலாம் டைம் இல்ல மாம்.” என்றான் கூலாக.
அவன் பதிலால் அவனை ஏற இறங்க ஒரு பார்வை பார்த்தவர், அதன்பின்னே செல்வியிடமிருந்த பாலையும், பழத்தையும் வாங்கி இருவருக்கும் கொடுத்தார்.
அவன் உண்ட மிச்சத்தை உண்ண அவளுக்கு விருப்பமில்லை.
இருந்தும் சுமதி கொடுத்ததற்காக உண்டவளுக்கு, அந்நேரத்திலும் இந்த வாயால் அவன் புகைத்தது டிரிங்ஸ் குடித்ததும் நினைவிற்கு வந்து போக தவறவில்லை.
“ச்சீ இவன் குடிச்ச மிச்சத்தையா நான் குடிச்சேன்” என்று நினைக்கும் போதே உமட்டிக்கொண்டுதான் வந்தது.
நாசியில் டியூப் விட்டதிலிருந்தே எச்சிலை விழுங்குவது கூட அவளுக்கு அருவெறுப்பாகதான் இருந்தது.
இதில் இதுவும் சேர்ந்து கொள்ள, அவளுக்கு இப்போது குடலை பிரட்டிகொண்டுதான் வந்தது.
வாயில் சுரந்த உப்புநீரை கஷ்டப்பட்டு விழுங்கிகொண்டவளுக்கு ஒரு கட்டத்தில் முடியாமல் போகவே, வாயை கையால் மூடிக்கொண்டவள்,
வாஷ்பேஷனை நோக்கி ஓட, “என்னாச்சி இதழ்..?” என்றவாறே அவனும் அவள் பின்னால் ஓடினான்.
உண்ட மொத்தத்தையும் அவள் வாந்தி எடுக்க, அவனோ அவள் தலையை கெட்டியாக பிடித்துகொண்டான்.
அனைத்தையும் எடுத்தபின் தான் அவளுக்கு சற்று நிம்மதியாக இருந்தது.
அருகிலிருந்த டிஷ்-யூ பேப்பரை எடுத்தவன், “ஆர் யூ ஓகே இதழ்” என்று கேட்டவாறே அவனே அவள் வாய் பகுதியை துடைத்தும் விட,
அதுவரையும் அதையெல்லாம் பார்த்து கொண்டிருந்த சுமதியோ, அதிர்ச்சியோடே “டேய்.. அடுத்து நான் உன் பொண்டாட்டிக்கு சீமந்தம் பண்ணனுமாடா..?” என்று விழிகள் விரித்து கேட்க,
அவர் கேள்வியின் அர்த்தம் புரிந்தவனோ, “ஐய்ய.. ச்சீ… நான் உங்க பையன்-ம்மா..” என்றான் என்னை நம்புங்கள் என்பது போல்.
“எனக்கும் சந்தேகமாதாண்டா இருக்கு நீ என் புள்ளதானான்னு..?” என்று அவரும் கொஞ்சமும் அதிர்ச்சி குறையாமல் சொல்ல.
“ம்மா அவ பாய்சன் சாப்டதால வாமிட் பண்றா..” என்றான் அவன்.
அவன் கூறியதை கேட்டு “என்னது பாய்சன்-ஆ..?” என்று மீண்டும் அதிர்ந்துதான் போனார் சுமதி. சுமதி மட்டுமல்ல இம்முறை சுதாகரனும் கூட.
“என்ன ரிஷப் சொல்ற..?” என்று தன்னையும் மீறி கொண்டு சுதாகரன் கேட்ட போது,
அன்னையிடம் பதிலுக்கு பதில் பேசியவன் சுதாகரனின் கேள்விக்கு பதில் சொல்லவே இல்லை.
அவனின் அமைதியிலேயே அவன் இன்னும் தன்னை மன்னிக்கவில்லை என்று சுதாகரனுக்கும் புரிய மேற்கொண்டு அவர் எதுவும் கேட்கவில்லை.
அவர் கேள்விக்கு பதில் சொல்லாமல் சில கணங்கள் அமைதி காத்தவன்,
“கவின்” என்றவனை அழைத்து, “எல்லாத்தையும் நீ எக்ஸ்பிளைன் பண்ணிடு நான் இதழ்-அ கூட்டிட்டு என் ரூம்-க்கு போறேன்” என்றான் அவள் உடல்நலனை கருத்தில் கொண்டு.
“டேய்… டேய்… நான் எப்படிடா..?” என்ற கவினின் வார்த்தைகள் எதையும் காதில் வாங்காமல் அவளை அழைத்துகொண்டு அவன் சென்று மறைய,
“இப்ப நான் எத இவங்களுக்கு எக்ஸ்பிளைன் பண்றது..” என்று புலம்பியவாறே தன் முன்னால் வந்து நின்ற சுமதியை பார்த்தவனுக்கு கை,கால்கள் எல்லாம் நடுங்க ஆரம்பித்துவிட்டது.
“ம்மா….” என்று அவன் தடுமாற,
“டேய் உண்மை-அ சொல்லுடா.. அவ எதுக்காக பாய்சன் சாப்டா..? சாகப்போறதா பிளாக் மெயில் பண்ணி இவதான் அவன தாலிகட்ட வச்சாளா..?” என்று கேட்டவருக்கு இன்னுமுமே மகன் மீதான நம்பிக்கை ஒரு ஓரத்தில் ஒட்டிக்கொண்டுதான் இருந்தது.
“என்னது சிஸ்டர் கட்டவச்சாங்களா..? உங்க பையன் தான் இத சாக்கா வச்சி சிஸ்டருக்கே தெரியாம சிஸ்டர் கழுத்துல தாலி-அ கட்டிட்டான்” என்றவனின் வார்த்தைகளை கேட்டவருக்கு அதீத அதிர்ச்சியின் விளாவால் கைகள் நடுங்க ஆரம்பித்துவிட்டது.
“டேய் நானே பீ.பி பேஷண்ட் டா.. ஏண்டா எனக்கு இப்படி அதிர்ச்சி மேல அதிர்ச்சி குடுக்குறீங்க..” என்று சொல்லும் போதே அவருக்கு முத்து முத்தாய் முகத்தில் வியர்த்து வழிந்ததோடு, கண்களையும் இருட்டி கொண்டு வந்தது.
பக்கத்தில் இருந்த இருக்கையை பற்றிபடியே இருக்கையில் அமர்ந்தவர், வெகு சிரமப்பட்டு சுதாகரனை பார்க்க, சுதாகரனோ வைத்த கண் எடுக்காமல் தன் மனைவியையே பார்த்து கொண்டிருந்தார்.
“ஏங்க நான் சாகற வரைக்கும் இப்படியே பார்த்துட்டு இருக்க போறீங்களா..? போய் அந்த பீ.பி டேப்ளட்-அ எடுத்துட்டு வாங்க” என்று கஷ்டப்பட்டு சுமதி சொல்ல, அதன் பின்னே சுதாகரன் ஓடிச்சென்று மாத்திரையை எடுத்துவந்து கொடுக்க, கவினோ தண்ணீர் எடுத்து வந்து கொடுத்தான்.
மாத்திரையை போட்டபின் தான் சுமதிக்கு படபடப்பு கொஞ்சம் குறைந்தது போல் இருந்தது.
கண்களை மூடி ஆழந்த பெருமூச்சி எடுத்துகொண்டவர், அதன் பின்னே கவின்-ஐ அழைத்து தன் அருகில் அமரவைத்து,
“என்ன தாண்டா நடந்துச்சி..?” என்றார்.
கவினுக்கோ இப்போது எங்கிருந்து ஆரம்பித்து எதையெல்லாம் சொல்ல வேண்டும் சொல்லகூடாதென்ற குழப்பம்.
“என்ன இப்படி வசமா மாட்டிவிட்டு போய்ட்டானே..?” என்று உள்ளுக்குள் அவனை நிந்தித்து கொண்டவன், அனைத்தயும் சொல்லாமல் புகைப்படம், வீடியோ வெளியானதால் அவள் தூக்கமருந்து சாப்பிட்டதையும், இந்த பிரச்சனைக்கு முற்றுபுள்ளி வைக்கும் பொருட்டே அவளை கூட கேட்காமல் திருமணம் செய்து கொண்டதாக சொல்ல, அவனின் பெற்றோர் இருவருமே அதிர்ச்சியில் வாயை பிளந்துவிட்டனர்.
“ஏண்டா இவ்வளோ நடந்திருக்கு.. ஒரு வார்த்தை என் கிட்ட சொல்லணும்னு உனக்கு தோணல இல்ல..” என்றவர் வருத்தம் தொணித்த குரலில் கேட்டபோது கவினுக்குமே மனதிற்கு கஷ்டமாகித்தான் போனது.
அவனும் என்ன சொல்லகூடாது என்றா இருந்தான். சொல்ல போனவனையும் ரிஷப் தானே தடுத்திருந்தான்.
என்ன சொல்லி அவரை சமாதனப்படுத்துவது என்று தெரியாமல் “ம்மா… அப்படில்லாம் இல்லம்மா” என்றவன் இழுக்க,
“போடா.. நீயும் அவன மாதிரி என் கிட்ட மறச்சிட்ட இல்ல..” என்றவர் இப்போது மற்றொரு இருக்கையில் அமர்ந்திருந்த சுதாகரனை பார்த்து,
“என்னவோ சொன்னீங்க..? நான் தான் அப்பவே சொன்னே இல்ல.. அவன் என் பையன்.. அவன் ஒன்னும் விரும்பி அந்த பொண்ண கல்யாணம் பண்ணல.. பிரச்சனைக்கு தீர்வாதான்..” என்றவர் முடிக்கும் முன்பே,
“ஹலோ மதர் சுப்பீரியர்.. அவன் விரும்பிதான் அந்த பொண்ண கல்யாணம் பண்ணிக்கிட்டான். சிஸ்டர்-க்கு பர்த்டே விஷ் பண்ண போய்தான் இந்த பிரச்சனையே ஆரம்பிச்சிது” என்றான் கவின்.




