சென்னையிலேயே மிக பிரபலமான தனியார் மருத்துவமனைக்குதான் அவளுடன் சேர்த்து அவள் குடும்பத்தாரையும் அழைத்து வந்திருந்தனர்.
அவளை பரிசோதித்த மருத்துவகுழுவோ வி.ஐபி களுக்கான பகுதியில் அப்சர்வேஷனில் அவளை வைத்திருந்ததோடு, அவள் குடும்பத்தார்க்கும் அங்கேயே சகலவசதிகளுடன் கூடிய அறையையும் ஒதுக்கியிருக்க இங்கு என்ன நடக்கிறது என்றே சண்முகம் குடும்பத்தினருக்கு புரியவில்லை.
“இங்க ஏன் கூட்டிட்டு வந்தீங்க..?” என்று யாரிடம் கேட்டாலும் அதற்கு சரியான பதிலும் இல்லை.
ஆனால் தேநீர் முதல் சாப்பாடு வரை அவர்கள் இருக்கும் இடத்திற்கே வந்து சேர, அவர்கள் யாரும்தான் உண்ணும் மனநிலையில் இல்லை.
அத்தோடு அவளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர், செவிலியர் தவிர வேறு யாரையும் அவர்கள் இருக்கும் பகுதிக்கு மருத்துவ நிர்வாக அனுமதிக்கவில்லை.
ஆரண்யா மூலம் விஷயம் கேள்விபட்டு வந்த தாரிகா-வையே பயங்கர செக்கிங்கிற்கு பிறகுதான் உள்ளே அனுமதித்திருந்தது மருத்துவ நிர்வாகம்.
நடந்த அனைத்தையும் தாரிகா மற்றும் ஆரண்யா மூலம் அறிந்த சண்முகத்திற்கு அவர்கள் இருவரையும் கொலை செய்யும் அளவிற்கு கோவம் தான்.
இதில் இதையெல்லாம் ஏன் முன்னமே சொல்லவில்லை என்று ஆரண்யாவிற்கு திட்டு வேறு விழுந்து கொண்டிருந்தது.
இலக்கியாவோ வந்தது முதல் அழுது புலம்பிய வண்ணமாகவே இருந்தாள்.
என்னதான் இனி அவள் உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லையென்று மருத்துவர் சொல்லியிருந்தாலும் அவர்களால் சந்தோஷப்பட முடியவில்லை.
காரணம் பிரச்சனையே இனிமேல்தானே.. அக்கம் பக்கத்தினர் கேட்பார்களே.. அவள் ஏன் இப்படியொரு முடிவை எடுத்தாள் என்று..
அப்படியே இவர்களாக ஏதாவது ஒரு காரணத்தை சொன்னாலும் அவர்கள் இஷ்டத்திற்கு கதை கட்டத்தானே செய்வார்கள்.. அதையெல்லாம் கண்டும் காணாமல் இலகுவாக அவர்களால் கடந்து செல்ல முடியுமா..? கடந்து செல்லத்தான் இந்த சமுதாயம் விட்டுவிடுமா…?
பின்நாளில் அவளுக்கு திருமண பேச்சி வார்த்தைகள் என்று வரும் போது… இதெல்லாம் மாப்பிளை வீட்டார் காதிற்கு சென்றால் அதன் பின் அவளுக்கு திருமணம் ஆவதே பெரும் கஷ்டமாயிற்றே..
அவளை கரைசேர்த்த பின் தானே ஆரண்யா-வை பற்றியும் அவர்களால் யோசிக்க முடியும்.
இதில் பத்தாதற்கு இரு பெண்களின் புகைப்படம் வேறு மீடியாவில் வெளியாகி இருக்க… இதையெல்லாம் எப்படி சரிசெய்வதென்று சண்முகத்திற்கு தெரியவில்லை.
மண்டையை பிய்த்து கொண்டு அறைவாசலை அளந்து கொண்டிருக்கும் போதுதான் தன் பவுன்சர்கள் புடைசூழ அங்கு வந்து சேர்ந்திருந்தான் ரிஷப் நந்தன்.
இதழினி இருக்கும் அறைவாசலுக்கு வெளியில் இருந்த இருக்கையில் அனைவரும் அமர்ந்திருக்க, அவனை முதலில் கவனித்தது என்னவோ ஹரண் தான்.
“அப்பா.. ரிஷப் சார்.” என்று மெல்லிய குரலில் ஹரண் சொல்ல அப்போதுதான் அங்கிருந்த அனைவருமே அவனை கவனித்தனர்.
பவுசர்களை அங்கேயே நிறுத்திவிட்டு அவன் மட்டும் தான் சற்று தயக்கத்துடனே அவர்கள் அருகில் வந்து நின்றான்.
அவனை பார்த்த மாத்திரத்திலேயே அனைத்திற்கு காரணம் இவன் தானே என்ற கோவம் சண்முகத்திற்குள் மேலிட, வந்த கோவத்திற்கு அவனுக்கு பேச கூட வாய்ப்பு தரமால் அவன் சட்டையை கொத்தாக பற்றியவன் அந்த கோவத்தோடே ரிஷப் கன்னத்தில் ஓங்கி ஒரு அறை அறைந்திருக்க, இதையாருமே அங்கு எதிர்பார்க்கவில்லை.
அனைவரின் விழிகளும் அதிர்ச்சியோடு அவர்கள் இருவரையுமே பார்த்திருக்க, சண்முகத்தை தடுப்பதற்காக ஓடிவந்த பவுசர்களோ ரிஷப் நந்தன் பார்த்த பார்வையில் அப்படியே நின்றுவிட்டனர்.
“நாங்க என்ன டா உனக்கு பாவம் பண்ணோம்..? ஏன் எங்க குடும்பத்த இப்படி சிதைச்சி வச்சியிருக்க..?” என்று கேட்டு மீண்டும் இன்னொரு கன்னத்தில் அறை விட, ரிஷப் நந்தன் பதிலுக்கு அவனை அடிக்கவும் இல்லை, எதிர்க்கவும் இல்லை, ஏன் அவன்பிடியிருந்து தன்னை விடுவித்து கொள்ள முயற்சி செய்யவும் இல்லை.
ஒரு தண்டனை கைதி போல் அப்படியே நின்றான் அவர் கொடுத்த அடியை வாங்கி கொண்டு.
இதையெல்லாம் எதிர்ப்பார்த்துதானே அவனும் இங்கு வந்தான்.
அந்த புகைப்படத்தையும், வீடியோவையும் யார் இணையத்தில் விட்டிருந்தாலும் நடந்த பிரச்சனைக்கு ஆரம்ப புள்ளி என்னவோ அவன் தானே..
அவன் மட்டும் அவளை பிளாட்டிற்கு அழைக்காமல் இருந்திருந்தால், பிறந்தநாள் வாழ்த்து சொல்வதற்காக அவள் வீடு வரை செல்லாமல் இருந்திருந்தால் இன்று அவள் இப்படி உயிரை விட முனைந்திருக்க மாட்டாளே..
அத்தோடு பெண்ணை பெற்றவர்களின் கோவமும் நியாயமானதுதானே.. அதனால்தான் அவன் இப்போது அமைதி காப்பது கூட.
பின் இலக்கியாதான் “மாமா என்ன பண்றீங்க..?” என்று கேட்டவாறே அவர்களை நெருங்கியவள், “விடுங்க மாமா..” என்றதோடு சண்முகத்தின் பிடியிலிருந்து அவனை விலக்கியும் விட,
விலகிநின்ற ரிஷப் நந்தனோ அவன் பிடித்ததில் கசங்கி போயிருந்த தன் ஷர்ட்டை சரிசெய்துகொண்டான்.
சண்முகம் அடித்ததில் அவன் இதழோரத்தில் இரத்தம் துளிர்த்திருக்க, அதை கட்டைவிரலால் துடைத்து கொண்டவன்,
“தப்பு என்னோடதுதான்.. ஐம் சாரி” என்றான் எங்கேயோ பார்த்தப்படி.
“நீ ஈஸியா மன்னிப்பு கேட்டுட்ட ஆனா இப்போ உயிருக்கு போராடிட்டு இருக்கறது என் பொண்ணுதானே..” என்று சொல்லும் போதே சண்முகத்தின் குரல் உடைய அவரின் வலி ரிஷப் நந்தனுக்கும் புரியவே செய்தது.
என்ன செய்ய..? அவன் மட்டும் என்ன விரும்பியா இதையெல்லாம் செய்தான்.. இல்லை இப்படியெல்லாம் நடக்கும் என்று எதிர்தான் பார்த்தானா..? அவனும் எவ்வளவோ முன்னெச்சரிக்கயோடுதான் இருந்தான்.
அவள் பாதுகாப்பாக வந்து போக கேப் ஏற்பாடு செய்தான். முகத்தை மூடி வர சொன்னான்.
ஏன் அவளை பார்க்க அவள் வீட்டிற்கு அவன் சென்றது கூட நள்ளிரவு வேளையில் தானே.. அதுவும் அந்நேரம் யாரும் விழித்திருக்க மாட்டார்கள் என்ற நம்பிக்கையில் தான்.
ஆனால் அந்த நேரத்திலும் உறங்காமல் ஆந்தை போல் விழித்திருந்து தன்னை வேவு பார்ப்பார்கள் என்று சற்றும் அவன் எதிர்பார்க்கவில்லை.
“எனக்கு வர்ற கோவத்துக்கு உன்ன கொல்லணும்னுதான் தோணுது.. ஆனா என்ன நம்பி இருக்கற நாலு ஜீவன்கள்-அ எனக்கு அடுத்து யார் பார்த்துப்பா…?” என்று ஆதங்கத்தோடு கேட்ட சண்முகம்.
“மீடியா ஃபீல்டுல இருக்கற உனக்கு வேணும்னா இதெல்லாம் சாதாரணமா இருக்கலாம்.. ஆனா எங்களுக்கு அப்படி இல்ல… ஏன்னா நாங்களாம் இருக்கற இடம் தெரியாம வாழ்ந்துட்டு போற நடுத்திர வர்க்கம்.. கோவத்த கூட நாங்க யோசிச்சிதான் காட்டணும்-ன்ற கட்டாயம். எங்ககிட்ட காசு பணம் வேணும்னா இல்லாம இருக்கலாம்.. ஆனா தன்மானம் நிறையவே இருக்கு. இப்போ அவ பொழச்சிட்டான்னு நினைச்சி சந்தோஷப்படுறதா.. இல்ல இனி அவ எதிர்காலத்த நினைச்சி வருத்தபடுறதான்னே தெரியல.. இதுலேந்து வெளியில வந்து எப்படி இந்த இரண்டு பொண்ணுங்களையும் கரசேர்க்க போறன்னு சுத்தமா எனக்கு தெரியல..” என்று சண்முகம் சொல்லி கொண்டிருக்கும் போதுதான் கவினும் அங்கு வந்து சேர்ந்திருந்தான்.
வந்து சேர்ந்தவனின் பார்வை முதலில் தேடியது என்னவோ ஆரண்யாவைதான்.
இலக்கியாவை கட்டிபிடித்துகொண்டு அவள் தேம்பி தேம்பி அழுதுகொண்டிருக்க, கவினுக்கோ உள்ளுக்குள் குத்தியது தன்னால் தானே அவளுக்கு இந்த நிலை என்று.
அவளை விட மூத்தவளே பிரச்சனையை எதிர்க்கொள்ளமுடியாமல் சாக துணியும் போது பாவம் சின்னப்பெண் அவள் மட்டும் என்ன செய்வாள்.
அத்தோடு இதையெல்லாம் கடந்து எப்படி அவள் வரப்போகிறாள் என்ற கவலை வேறு அவள் குறித்து அவனுக்கு.
பரிதாபமாக அவன் பார்வை அவள் மீதே படிந்திருக்க, பின் ரிஷப் தான் “கவின்” என்று அவனை அழைத்து என்னாச்சி என்பது போல் அவனை பார்த்தான்.
அவன் பார்வையின் அர்த்தம் புரிந்த கவினோ “நெட்லேந்து போட்டோ, வீடியோஸ் எல்லாத்தையும் டெலிட் பண்ணியாச்சி டார்லிங்.. இனி யாராவது அப்லோட் பண்ணாலும் அத ரெஸ்ட்ரிக் பண்ணிடுவாங்க..” என்றவன் சொல்ல, இதழினி குடும்பத்தார்க்கு அப்போதுதான் உயிரே வந்தது போல் இருந்தது.
ஆனால் ரிஷப் நந்தனுக்கு இது போதவில்லை.. அவனுக்கு தேவை இந்த வேலையை பார்த்த நபர் தான்.
அதனாலே “யாருண்ணு தெரிஞ்சிதா கவின்..?” என்று கேட்கும் போதே ரிஷப் நந்தனின் மூக்கு நுனி கோவத்தில் சிவந்து போயிருந்தது.
அவனின் கேள்விக்கு இல்லை என்பது போல் தலையை அசைத்தவன், “ஒவ்வொரு ஃபைவ் செக்ண்ட்ஸ் ஒன்ஸ்-ம் ஐ.பி அட்ரஸ் லொக்கேஷன் மாறிக்கிட்டே இருக்கு டார்லிங். துபாய், மலேசியா, யூ.கே-ன்னு..” என்றவன் இழுக்க, ரிஷப்போ கோவத்தில் இரு கை முஷ்டிகளையும் மூடி திறந்தான்.
எப்போது விஷயம் அவன் காதிற்கு சென்றதோ உடனே அவன் தன் செல்வாக்கை வைத்து சைபர் க்ரைம்-மை தான் தொடர்பு கொண்டான்.
கவின் குடும்பத்தார்க்கு ஐ.ஜி நன்கு பழக்கம் என்பதால் உடனடியாகவே அவர்கள் சம்மந்தபட்ட போட்டோவையும் வீடியோவையும் இணையத்திலிருந்து மொத்தமாக அழிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அத்தோடு மேற்கொண்டு இந்த செய்தியை எந்த மீடியாக்களும் ஒளிபரப்ப கூடாது என்று கோர்ட்டில் அவன் வழக்கும் தொடர்ந்திருக்க, மீடியாக்களும் அவன் சம்மந்தபட்ட செய்தியை ஒளிபரப்புவதை நிறுத்தியிருந்தது.
எங்கே ஜி.ஹெச்-சிற்கு சென்று அவளை பார்த்தால் மீண்டும் ஏதாவது பிரச்சனை வந்துவிடுமோ என்று நினைத்தவன் அவளின் நலத்தையும் கருதில் கொண்டே அவளையும் அவள் குடும்பத்தாரையும் இந்த மருத்துவமனைக்கு அழைத்து வந்தது.
அனைத்தையும் ஒரு மணிநேரத்தில் முடித்தவன் அதன் பின் தான் அவளை தேடி கொண்டு மருத்துவமனைக்கு வந்தது கூட.
அவன் விழிகள் நிறைய கோவத்துடன் அமைதியாகவே நின்றிருக்க, பின் கவின் தான் “சீக்கரம் கண்டுபிடிச்சிடுவோன்னுதான் சொல்றாங்க டார்லிங்..” என்க,
அவனை திரும்பி பார்த்த ரிஷப்-போ, “எனக்கு அவன் கண்டிப்பா வேணும்” என்று அழுத்தம் திருத்தமாக சொல்ல, அவனும் சரி என்பது போல் தலையை மட்டும் அசைத்து வைத்தான்.
“அப்புறம் நான் கேட்டது..” என்று ரிஷப் முடிக்கும் முன்பே, “இருக்கு டார்லிங்” என்று கவின் சொல்ல, அனைவரையும் ஒரு பார்வை பார்த்த ரிஷப் நந்தனோ,
கவினை மட்டும் தன்னுடன் அழைத்துகொண்டு அவள் இருக்கும் அறைக்கதவை திறந்து உள்ளே நுழைய, அவளோ படுக்கையில் சுயம் இன்றி படுத்திருந்தாள்.
அவளை இந்த நிலமையில் பார்த்த இருவருக்குமே மனம் கசந்துதான் போனது,
அதிலும் ரிஷப் நந்தனுக்கு கண்களே கலங்கிவிட்டது. அனைவரையும் விட அதிகம் வலித்தது என்னவோ அவனுக்குதான் அவள் நிலையை பார்த்தது.
காரணம் அவன் காதல், அவன் காதலி அல்லவா அவள்.
அவள் அருகில் சென்று டிரிப்ஸ் ஏறிகொண்டிருந்த கரத்தை பற்றி மிருதுவாக வருடிவிட்டவன், இப்போது திரும்பி கவினை பார்த்தான்.
அவன் பார்வையின் அர்த்தம் புரிந்த கவினோ தன் பாக்கெட்டில் இருந்த மங்கள நாணை எடுத்து அவனிடம் கொடுக்க , அதை வாங்கிகொண்டவனோ தன் கையில் இருந்த மங்களநாணையும் அவளையும் மாறி மாறி பார்த்தான்.
இப்படி ஒரு சூழ்நிலையில் தன் திருமணம் நடக்கும் என்று சற்றும் அவன் எதிர்பார்க்கவில்லை.
தன் காதலை அவளிடம் சொல்லி, அவளையும் தன்னை காதலிக்க வைத்து அதன் பின் இரு வீட்டார் சம்மத்தோடு வெகு பிரம்மாண்டமாக அவள் கரம் பிடிக்க வேண்டும் என்று ஆசை ஆசையாய் காத்திருந்தவனுக்கு இப்படியொரு முடிவை எடுக்க கஷ்டமாகத்தான் இருந்தது.
இருந்தும் முடிவெடுக்க வேண்டிய கட்டாயம்.
அத்தோடு அவளை யாரும் தவறாக பேசிவிடக்கூடாது என்பதிலும் அவன் உறுதியாக இருந்தான்.
எப்போது தன்னோடு சேர்த்து வைத்து அவள் பேசப்பட்டாலோ அப்போதே அவளுக்கு தன்னை பிடிக்கறதோ இல்லையோ இன்று அவர்களின் திருமணம் என்று முடிவு செய்துவிட்டிருந்தான் அவன்.
அதனாலே கவினை அனுப்பி தாலி வாங்கிவர சொல்லியிருந்தான்.
“டார்லிங்.. எதுக்கும் சிஸ்டர் வீட்ல உள்ளவங்ககிட்ட ஒரு வார்த்தை…” என்று கவின் இழுத்த போது,
“நான் இவக்கிட்டயே ஒரு வார்த்தை கூட கேட்கல” என்றவன் அடுத்தகணமே அந்த மங்களநாணை அவள் கழுத்தருகே கொண்டு சென்று, அவள் முகத்தை பார்த்தவாறே மூன்று முடிச்சிட்டு அவளை தன்னவளாக்கி இருந்தான்.
பின் தன்னவள் என்ற உரிமையோடு அவள் நெற்றியில் அழுத்தமாய் இதழ்பதித்துவிட்டு அவன் விலக,
“கங்ராட்ஸ் டார்லிங்” என்று அவனை கட்டியணைத்து தன் வாழ்த்தை தெரிவித்தான் கவின்.
“தேங்க்ஸ் டா” என்று பதிலுக்கு சொன்னவன் மீண்டும் படுக்கையில் கிடப்பவளை ஒரு பார்வை பார்த்துவிட்டுதான் அறையிலிருந்து வெளியேறினான்.
வெளியில் வந்த இருவரையும் விழிகள் கலங்க ஆரண்யா பார்த்திருக்க, அவள் அருகில் சென்றவனோ “ஐம் ரியலி சாரி ஆரண்யா..” என்று மனதார மன்னிப்பு கேட்க, “நானும்” என்றான் கவின்.
பின் நேராக சண்முகத்திடம் சென்றவன், “உயிருக்கு போராடிட்டு இருக்கறது உங்க பொண்ணு மட்டுமில்ல.. என் பொண்டாட்டியும் கூட” என்று அழுத்தம் திருத்தமாக அவன் சொல்ல அனைவரின் விழிகளும் அதிர்ச்சியில் ஒரு சுற்று விரிந்து தான் போயின.
“அப்புறம்.. உங்கள திருப்பி அடிக்கதெரியாமலாம் இல்ல.. மாமனார் மேல கைவைக்க கூடாதுன்னுதான் நான் அமைதியா இருந்தது” என்று தன் அமைதிக்கு காரணம் சொன்னவன்,
“ம்.. அப்புறம் என்ன சொன்னீங்க..? தன்மானம் மிடிஸ்கிளாஸ்-க்கு மட்டும் தான்னா..?” என்று கேட்டு இல்லை என்பது போல் தலையை இடவலமாக அசைத்தவன்,
“அது அப்படி இல்ல.. தன்மானம்-ன்றது மனுஷனா பொறந்த எல்லாருக்கும் இருக்கு. எனக்கும் இருக்கு” என்றான் தனக்கும் இந்த விஷயத்தில் பாதிப்பு இருக்கிறது என்பது போல்.
ஆம். என்னதான் பிரச்சனைக்கான காரணபுள்ளியாக அவன் இருந்தாலும் இந்த விஷயத்தில் பாதிப்பு என்பது அவனுக்கும் இருக்கிறது தானே.
அதுவும் சமுதாயத்தில் அத்தனை உயரத்தில் இருப்பவனுக்கு ஏற்பட்ட இழப்புகள் கொஞ்சம் நஞ்சம் இல்லையே.
தொழில் முறையில் எப்போது அவன் சரிவான் என்று கங்கணம் கட்டிகொண்டு திரிந்தவர்கள் இதுதான் சந்தர்ப்பம் என்று அவன் ஸ்டுடியோவை அடித்து நொறுக்கியிருந்தனர்.
கைவசம் அவனிடமிருந்த இரண்டு படங்கள் அவன் கையை விட்டு போயிருந்தன.
பொதுவெளியில் மது அருந்தியதற்காக அவன் மீது சிலர் பொதுநல வழக்குகளையும் தொடர்ந்திருந்தனர்.
இணையதளங்களில் கூட அவனை விட்டுவைக்கவில்லை.. கருத்து சுதந்தரம் என்ற பெயரில் அவன் மீதான வன்மங்களை கொட்டிதீர்த்து கொண்டிருந்தனர்.
அத்தனைக்கும் மேல் அவன் உயிருக்கு உயிராய் நேசிக்கும் அவள் உயிருக்கு போராடிக்கொண்டிருக்கிறாளே. அதுவும் பிறந்தநாள் அன்று. அதைத்தான் அவனால் ஜீரணித்து கொள்ள முடியவில்லை.
அவன் வார்த்தைகளால் எதுவும் பேசமுடியாமல் சண்முகம் திகைத்து போய் நிற்க, ரிஷப் நந்தனோ கவினை அழைத்து கொண்டு அங்கிருந்து கிளம்பியிருந்தான்.
எதுவும் பேசாமல் கோவத்தில் வேக எட்டுகளுடன் சென்று கொண்டிருந்தவனின் கரத்தை பிடித்து நிறுத்திய கவின், அவன் மோவாயை பற்றி இப்படியும் அப்படியுமாக திருப்பி பார்த்தான்.
சண்முகம் அறைந்த அறையில் அவன் இதழோரத்தில் உறைந்து போயிருந்த இரத்ததை பார்த்தவன் “என்ன டார்லிங்.. உன் மாமனார் உன்ன ரொம்ப கொஞ்சிட்டார் போல.. அவ்வளோ பாசமா..?” என்று சிரித்து கொண்டே நக்கலாய் கேட்க,
அவன் கூறியதை கேட்டு ரிஷப் நந்தனின் இதழ்களிலும் குறுநகை மின்னவே செய்தது.
“ஆமா.. ஆமா.. ரொம்ப பாசம் தான்.. அதுவும் என்ன விட பியர் பாட்டில் ஓப்பன் பண்ண உன் மேலதான் ரொம்ப பாசமாம். என்ன..? ஸ்பாட்-ல நீ இல்லாததால உன் மேல உள்ள பாசத்தையும் சேர்த்து என் மேல காட்டிட்டாரு.” என்று சிரிப்பை விழுங்கி கொண்டு சொன்னவன்,
இப்போது அவன் கழுத்தை தன்னோடு வளைத்து அணைத்து, “நான் வேணும்னா உன் பங்க அவர் ஸ்டைல்லே திருப்பி கொடுத்திடட்டுமா..?” என்று கேட்டதோடு அவன் வாயில் குத்துவதற்காக கையையும் ஓங்கியிருக்க,
“ஐய்யய்யோ.. டார்லிங்… இப்படி அவசரப்பட்டுலாம் குத்திடாத.. நாளைக்கு எனக்கு இஷானா கூடா டேட் இருக்கு.. கிஸ் பண்ண முடியாம போய்டும்… பிளீஸ்..” என்றான் கெஞ்சும் குரலில்.
அவன் அவ்வாறு கூறியதை கேட்டு, “தூ.. திருந்தவே மாட்டியாடா..?” என்று கேட்டவன் அதன் பின்னே தன் பிடியிலிருந்து அவனுக்கு விடுதலையும் கொடுத்திருந்தான்.
விட்டால் போதுமென்று அவனிடமிருந்து விலகி நடந்த கவினோ முன்னுச்சியை கோதிவிட்டவாறே,
“அடபோப்பா.. நான்-லா திருந்தனா.. பொண்ணுங்க மனசு தாங்காது..” என்று விட்டுகொடுக்காமல் சொல்ல, அவன் சொன்ன தோணியில் ரிஷப் நந்தன் சிரித்துவிட, அவன் சிரிப்பில் கவினும் இணைந்து கொண்டான்.
அவ்வளவுதான் அவர்களின் கோவமெல்லாம். இப்போது மட்டுமல்ல எப்போது ரிஷப் நந்தன் கோவப்பட்டாலும் கவின் இப்படிதான் எதையாவது சொல்லி அவனை திசைத்திருப்புவான். அதைத்தான் இன்றும் செய்தான்.
“ஆமா.. டாக்டர்-அ பார்த்தியா..? என்ன சொன்னாரு..?” என்ற கவினின் கேள்விக்கு,
“ம்.. பார்த்தேன்.. இன்னும் ஒன் ஹவர்-ல கண்முழிச்சிடுவாளாம். டிஸ்சார்ச் பண்ண எப்படியும் டூ டேஸ் ஆகுமாம்.” என்றான் ரிஷப் இணையத்தில் தனக்கெதிராக இருக்கும் விமரசனங்களை போனில் பார்த்தவாறே.
“அப்போ ஒன் ஹவர்-க்கு அப்புறம் தான் கச்சேரியே இருக்கு இல்லையா..?” என்று கேட்டவனை பார்த்து கண்ணடித்தவனுக்குமே உள்ளுக்குள் அதே சிந்தனைதான் இந்த திருமணத்தை அவள் எப்படி எதிர்கொள்வாள் என்று.
அவள் எப்படி எடுத்து கொண்டாலும் சரி… இந்த திருமண பந்ததிலிருந்து வெளியேறுவதற்கான வாய்ப்பை மட்டும் அவளுக்கு கொடுத்துவிடகூடாது என்பதில் அவனும் உறுதியாகவே இருந்தான்.




