நான்சியை பற்றிய உண்மையையும் அவனால் சொல்ல முடியவில்லை, பிரதிக்ஷா குறித்து மீராநந்தன் சொன்னதையும் அவனால் சொல்ல முடியவில்லை.
அப்படியே சொன்னால் மீராநந்தன் பதிலுக்கு தன்னிடமிருக்கும் ஆதாரங்களை காட்டுவான். அது இன்னும் அவனுக்கும் அவன் குடும்பத்தாருக்கும் பிரச்சனை தான்.
“உன்ன தான் கேட்குறேன் ஹரி.. எதுக்காக இப்போ பார்ட்னர்ஷி-அ கேன்சல் பண்ண சொல்ற..?” என்று மீண்டும் ஜெயசீலன் கேட்டபோது,
“எனக்கு புடிக்கல..” என்றான் ஹரிஹரன் மொட்டையாக.
அவனின் பதிலால் ஜெயசீலனுக்கு கடுப்புதான்.
அந்த கடுப்புடனே “என்ன விளையாடுறீயா நீ..? இவங்க கூடதான் பார்ட்னர்ஷிப் வச்சாகணும்னு ஒத்த கால்-ல நின்னு எல்லாத்தையும் பண்ணிட்டு இப்போ பிடிக்கலன்னு சொன்னா என்ன அர்த்தம்..? ரீசன் சொல்லு” என்று கேட்டவனிடன்,
ஹரிஹரனோ பிரதிக்ஷாவைத்தான் கைகாட்டினான். அவளை வேலைக்கு அமர்த்துவதில் தனக்கு விருப்பம் இல்லையென்று.
“டேய்.. பாவம் டா அந்த பொண்ணு.. சத்யன்-அ கல்யாணம் பண்ணத தவிர இந்த வீட்ல-ல வேற எந்த சந்தோஷத்தையாவது அவ அனுபவிச்சியிருக்காளா..? நமக்குதான் பாட்டி வார்த்தை-அ மீற தைரியம் இல்லாம போச்சி.” என்று குறைப்பட்டுக் கொண்டவன்,
“ஆமா.. பார்ட்னர்ஷிப்-அ கேன்சல் பண்ணிடலாம்னு சொல்றீயே… அவங்களுக்கு கொடுக்க நூறு கோடி ரூபாய் வச்சியிருக்கியா..?” என்று கேட்டவனை பார்த்து,
“நூறு கோடியா..?” என்பது போல் வாயை பிளந்தான் ஹரிஹரன்.
பின் “நாம ஏன் நூறு கோடி தரணும்னு..?” என்றான்.
“ஆமா… அதுதானே அக்ரீமெண்ட்.” என்ற ஜெயசீலனை என்ன அக்ரீமெண்ட்..? என்பது போல் புரியாமல் பார்த்தான் ஹரிஹரன்.
அவன் முகபாவனையை வைத்தே அவன் மனதில் இருப்பதை புரிந்து கொண்டவன், “நாமளாதன அவங்கள தேடிப் போய் பார்ட்னர்ஷிப் வச்சியிருக்கோம். ஸோ கேன்சல் பண்ணா நஷ்ட ஈடா நூறு கோடி ரூபாய்-அ நாம மீராநந்தனுக்கு தரணும்” என்று அவனுக்கு புரியும் படி தெளிவாக சொன்ன ஜெயசீலன்,
“அன்னைக்கு அக்ரீமெண்ட்-அ அப்படி புரட்டி புரட்டி பார்த்த இத படிக்கலையா..?” என்று நக்கலாய் வேறு கேட்டுவைக்க, ஹரிஹரனால் வாயைத்திறக்க முடியவில்லை.
“இதுவும் போச்சா..?” என்று கோவத்தில் பற்களை கடித்துகொண்டவனுக்கு அடுத்து என்ன செய்வதென்றும் தெரியவில்லை.
“சொல்லுடா நூறு கோடி வச்சியிருக்கீயா..?” என்று கேட்ட ஜெயசீலனின் வார்த்தைகள் எதையும் காதில் வாங்காமல் ஹரிஹரன் அங்கிருந்து வெளியேற,
“இவனுக்கு என்னாச்சி..?” என்று முனுமுனுத்தவாறே மீண்டும் தன் வேலைகளை பார்க்க ஆரம்பித்தான் ஜெயசீலன்.
அதீத கோவத்தோடு ஜெயசீலனின் அறையிலிருந்து வெளியேறியவனை விசில் அடித்து மீராநந்தன் அழைத்திருக்க, அது ஏற்கனவே எரிச்சலில் இருந்தவனுக்கு மேலும் கோவத்தைதான் ஏற்படுத்தியது.
பதிலுக்கு அவனை முறைத்து பார்த்தவாறே ஹரிஹரன் நின்றிருக்க, “என்னாச்சி ஹரி ப்ரோ..? நூறு கோடி இல்லையா..?” என்று கேட்டு வேறு மீராநந்தன் உதட்டை பிதுக்க, ஹரிஹரனுக்கு பற்றிக்கொண்டுதான் வந்தது.
இருந்தும் அவனால் எதுவும் செய்ய முடியாத சூழல்.
மீராநந்தன் குறித்து இராஜவர்மன் சொன்னது எத்தனை உண்மை என்று ஹரிஹரனுக்கு இப்போது புரிந்திருந்தது.
அத்தோடு மீராநந்தன் விஷயத்தில் தானும் கொஞ்சம் மெத்தனமாக இருந்துவிட்டதாகவே தோன்றியது ஹரிஹரனுக்கு.
விழிகள் நிறையகோவத்தோடு அவன் கேள்விக்கு பதில் எதுவும் சொல்ல முடியாமல் ஹரிஹரன் நின்றிருக்க,
“ஆமா… என் ஆளு கூடவே வால் புடிச்ச மாதிரி சுத்திக்கிட்டு இருக்கற இந்த வள்ளியம்மை யாரு..?” என்று கேட்ட மீராநந்தனை முறைத்துப்பார்த்தவாறே,
“அவ பிரதிக்ஷாவை கவனிச்சிக்கறதுக்காக இங்க இருக்கா.” என்றான்.
பதிலுக்கு “ஓ..” என்று இழுத்தவன், “அதான் என் பொண்டாட்டி-அ கவனிச்சிக்க நான் வந்துட்டேன் இல்ல. இனிமே அவ எதுக்கு..?” என்று திருப்பி கேட்ட மீராநந்தனின் வார்த்தைகளால் ஹரிஹரனுக்கு கோவம் சுர்ரென்று தலைக்கேறியது.
“ஏய்.. அவ என் தம்பி பொண்டாட்டி” என்று அடக்கமட்டாத கோவத்துடன் பற்களை கடித்துக்கொண்டு அவன் கர்ஜிக்க,
“ஏண்டா உனக்கென்ன கஜினி சூர்யா வியாதியா..?” என்று சிரிப்பை விழுங்கிகொண்டு அவனை கேலிசெய்தவன்,
“உன் தம்பி பொண்டாட்டி நான்சிதான்” என்றான் மீண்டும் அழுத்தம் திருத்தமான குரலில்.
அவனின் வார்த்தைகளால் ஹரிஹரன் அவனை முறைத்து பார்க்க, அவன் பார்வையையெல்லாம் மீராநந்தன் ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளவே இல்லை.
“ஸோ.. நீ என்ன பண்ணுவியோ.. யார் கிட்ட பேசுவியோ… எனக்கு தெரியாது.. அந்த வள்ளியம்மை இனி இந்த வீட்ல இருக்க கூடாது.” என்று மீராநந்தன் சொன்னபோது,
அவன் எதை மனதில் வைத்துக்கொண்டு அப்படி சொல்கிறான் என்பது ஹரஹரனுக்கும் புரியவே செய்தது.
அதனாலே, “அவள எங்கயும் அனுப்ப முடியாது.” என்றான் காட்டமாக வேறு எங்கேயோ பார்த்தப்படி.
“அப்டியா..?” என்று புருவமத்தியை உயர்த்திகேட்ட மீராநந்தன், “எங்க இத பார்த்துட்டு சொல்லு பார்க்கலாம்” என்றவன், சற்றுமுன் தன் செல்போனில் அவனிடம் காட்டிய புகைப்படங்களை மீண்டும் அவனிடம் காட்டியதோடு,
“நீ அனுப்பல.. நான் இத காட்டி உன் அப்பன..” என்று இழுத்தவன் மேலே அனுப்பிவிடுவேன் என்பது போல் மேலே பார்த்து விசிலடிக்க, ஹரிஹரனால்தான் எதுவும் பேசமுடியவில்லை.
“நைட் டின்னர்க்குள்ள நீ அவள அனுப்பற.. இல்ல…” என்று இழுத்தவன் அதன் பின் நடக்கபோகும் அசம்பாவிதங்களுக்கு நான் பொறுப்பில்லை என்பது போல் இருகைகளையும் விரித்து தோளைக்குலுக்க, மீராநந்தன் மீது காட்ட முடியாத கோவத்தால் பற்களைக் கடித்துக்கொண்டு தன் கைமுஷ்டிகளை இறுக மூடினான் ஹரிஹரன்.
அவனாலும் அவனை மீறி எதுவும் செய்ய முடியாத சூழல்.
இருந்தும் “நீ எப்படி பிரதிக்ஷாவ நெருங்கறன்னு நானும் பார்க்கறேன் டா.” என்று கோவத்தில் வார்த்தைகளை கடித்து ஹரிஹரன் துப்ப,
“என்ன ப்ரோ சேலன்ஞ்சா..?” என்று கேட்டுவிட்டு கீழ் அதரங்களை கடித்தபடி அழகாய் சிரித்தான் மீராநந்தன்.
பின் என்ன நினைத்தானோ “இன்னைக்கு நைட் அவ ரூம்-க்கே போய்… அவள மீட் பண்ணி பேசப்போறேன். முடிஞ்சா தடுத்துக்கோ” என்பது போல் பதிலுக்கு மீராநந்தன் சவால் விட, ஹரிஹரன் தான் கொஞ்சம் அதிர்ந்துபோனான்.
இப்படி பதிலுக்கு பதில் சவால் விடுவான் என்று ஹரிஹரன் சற்றும் எதிர்ப்பார்க்கவில்லை. அதுவும் வந்த நாளே.
இவனை வீட்டில் தங்க சொன்னது எவ்வளவு பெரிய தவறு என்று இப்போது ஹரிஹரனுக்கு புரிந்தது.
மீராநந்தனைப் பற்றி நன்கு அறிந்ததால் தானே இராஜவர்மன் படித்து படித்து சொன்னான் அவனிடம் மட்டும் வாய்த்திறக்காதே என்று.
ஹரிஹரனின் முன்கோவத்தாலும், வாயாலும் தான் காலைமுதலே அவன் மீராநந்தனிடம் மாட்டிக்கொண்டு விழிப்பது கூட.
பதிலுக்கு எதுவும் பேசாமல் ஹரிஹரன் அங்கிருந்து நகர, செல்லும் அவனையே இதழ்களில் சிரிப்போடு பார்த்துக் கொண்டிருந்தான் மீராநந்தன்.
அவன் மனைவி ரோஷினி அறையில் உறங்கிகொண்டிருப்பதால் அறைக்கு செல்லாமல் நேராக வீட்டிற்குள் இருக்கும் அலுவலக அறைக்குதான் சென்றான் ஹரிஹரன்.
வந்த கோவத்திற்கு கண்ணில் பட்டதையெல்லாம் தூக்கி எறிந்தவனுக்கு இன்னமுமே கோவம் அடங்கியபாடு இல்லை.
“என் வீட்ல இருந்துகிட்டு என்னையே மிரட்டுறான். இவன…” என்று பற்களை கடித்தவாறு நெற்றிபொட்டில் இருவிரல் குற்றி யோசித்தவனுக்கு தலையே வெடிப்பது போல் இருந்தது.
இராஜவர்மனை துணைக்கு அழைக்கலாம் என்றால்.. அவனிடம் நான்சி பற்றிய உண்மையை சொல்லியாக வேண்டும்.
ஏன் இத்தனைக் காலங்கள் என்னிடம் மறைத்தாய் என்று கேட்டு அவனும் பதிலுக்கு சட்டையை பிடிப்பான்.
வீட்டிலும் அவனால் யாரிடமும் உதவி கேட்க முடியாது.
பின் எப்படித்தான் இந்த மீராநந்தனை கையாள்வதென்று தீவிரமாக யோசித்தவனுக்கு தலையே வெடிப்பது போல் இருந்தது.
இதில் வள்ளியம்மையை இங்கிருந்து அனுப்புவதை பற்றி வேறு அவன் யோசித்தாக வேண்டிய கட்டாயாம். அதுவும் இரவு உணவிற்கு முன்பே.
எப்படி அவளை இங்கிருந்து அனுப்புவது என்று அறையை அளந்தவாறே தீவிரமாக யோசித்தவனுக்கு அது ஒன்றுதான் சரியென்று பட்டது.
திருப்பூரில் இருக்கும் வள்ளியம்மையின் தந்தைக்கு போன் செய்தவன், அட்டாக் வந்தது போல் அவன் சொன்ன மருத்துவமனைக்கு சென்று அட்மிட்-ஆக சொன்னதோடு தான் கூறும்வரை மருத்துமனையிலேயேதான் இருக்க வேண்டும் என்றும் சொல்ல வள்ளியம்மையின் தந்தையும் எந்த கேள்வியும் கேட்காமல் சரியென்று சொல்லிவிட்டார்.
ஐந்து வருடகாலமாக அவர்களுக்கு படியளக்கும் முதலாளியாற்றே. முடியாது என்று எதிர்த்தா சொல்ல முடியும். இல்லை ஏன் என்று கேள்வி கேட்கத்தான் முடியுமா..?
இத்தனைக்கும் இங்கு பிரதிக்ஷாவை கண்காணிப்பதற்காக வள்ளியம்மையை அழைத்து வந்ததே ஹரிஹரன் தான்.
அடுத்து திருப்பூரில் தனக்கு தெரிந்த மருத்துவமனைக்கும் போன் செய்து வள்ளியம்மையின் தந்தையை அட்மிட் செய்வதற்கான ஏற்பாடுகளை செய்ய சொன்னான்.
ஹரிஹரன் சொல்லியிருந்தது போலவே அடுத்த ஒரு மணிநேரத்திற்கெல்லாம் வள்ளியம்மையின் தாய் கௌசல்யாவிற்கு அழைத்து விஷயத்தை சொல்ல,
அதன் பின் யாருக்கும் எந்தவித சந்தேகமும் இல்லாமல் வள்ளியம்மை இங்கிருந்து கிளம்ப, அனைத்தையும் மாடியில் நின்றவாறு பார்த்துக் கொண்டுதான் இருந்தான் மீராநந்தன்.
ஷியாம் தூங்கி எழுந்தது முதலே “அம்மம்மா… அம்மம்மா..” என்று கௌசல்யாவையே சுற்றிகொண்டிருந்தான்.
கதைகள் சொல்வது, அவர்களோடு விளையாடுவதென்று பேரக்குழந்தைகளோடு கௌசல்யா பிஸியாகி விட,
அவரின் இரண்டும் மருமகள்களும் நான்சியோடு பேச அமர்ந்துவிட்டனர்.
அதிலும் ஜெயசீலனின் மனைவி கீதா-விற்கு ஹெல்த் கேர்-ல் அதீத ஈடுபாடு என்பதால் அது குறித்து நான்சியிடம் அதிகம் பேசினாள்.
ரோஷினி-க்கு வெளிநாட்டு வாழ்க்கை மீது மோகம் என்பதால் அவளும் தன் பங்கிற்கு அது குறித்த சந்தேகங்களை கேட்டு தெரிந்து கொண்டாள்.
பின் அவர்கள் பிறப்பு, பள்ளி, கல்லூரி என்று பேச்சி நீண்டது.
ரோஷினி நான்சி குறித்து கேட்டபோது,
தான் ஒரு அனாதை என்றும், திருச்சியில் உள்ள அனாதை இல்லத்தில் வளர்ந்ததாகவும் சொன்னபோது பெண்கள் இருவருக்குமே அவள் மீது அனுதாபம்தான் வந்தது.
பின் ஸ்காலர்ஷிப் மூலம் படித்து முடித்து, மேற்படிப்பிற்காக அமெரிக்கா சென்று இப்போது அங்கேயே பணியில் இருப்பதாகவும் சொன்ன போது, யார் உதவியும் இன்றி தனி ஒரு பெண்ணாக இந்த அளவிற்கு வளர்ந்திருக்கும் நான்சி மீது இருவருக்கும் மரியாதை தான் கூடியது.
“நான்சிக்கு லவ் மேரேஜ் தன..?” என்ற கீதாவின் கேள்வியால் நான்சியின் முகம் சிவப்பேற அதை பெண்கள் இருவரும் கவனிக்கவே செய்தனர்.
“ஹே… அப்போ நீ உங்க லவ் ஸ்டோரி-அ சொல்லியா ஆகணும் நான்சி..” என்று ரோஷினியும் பிடித்துக்கொள்ள,
நான்சியும் வேறு வழியின்றி சொல்ல ஆரம்பித்தாள்.
படிக்க வந்த இடத்தில் பார்த்த மாத்திரத்திலேயே பிடித்து போய் காதலித்ததாகவும், ஒருவருடகாலம் ஒன்றாக சந்தோஷமாக வாழ்ந்ததாகவும் சொன்னவள்,
“ஆனா எங்க காதல் வாழ்க்கை ஒரு வருஷத்துக்கு மேல நீடிக்கல. ஒரு விபத்து-ல அவர்.. ” என்றவளால் மேற்கொண்டு சொல்லமுடியாமல் துக்கம் தொண்டையை அடைத்ததோடு, நான்சியின் கண்களும் கலங்க,
அவளை ஆறுதல் படுத்தும் விதமாக நான்சியின் கரத்தை ஆறுதலாக பற்றிக்கொண்டாள் கீதா.
“நான் பிரக்னன்ட்-ஆ இருந்தது கூட ஷியாம் அப்பாவுக்கு தெரியாது.” என்று சொன்னபோது பெண்கள் இருவருக்குமே மனம் பாரமாகிவிட்டது.
“எனக்குதான் இப்படியொரு தலையெழுத்துனா.. கடைசியில ஷியாம்-க்கும் இப்படி ஆகிடுச்சி.” என்றவளின் வலிகள் நிறைந்த பார்வை ஒரு கணம் கௌசல்யாவின் மடியில் அமர்ந்திருந்த ஷியாமின் மீது படிந்து மீண்டது.
“அப்படிலாம் எதுவும் இல்ல… ஏன் நாங்களாம் இல்லையா..?” என்ற ரோஷினியின் வார்த்தைகள் தான் அப்போதைக்கு அவளை தேற்றியது.
பிரதிக்ஷாவிடம் பேசவேண்டும் என்பதற்காகதான் நான்சி இவர்களிடம் பேச்சி கொடுத்தது. ஆனால் பிரதிக்ஷா அறையை விட்டு வெளியில் வரவே இல்லை.
காலையில் நடந்த நிகழ்வுகளால் ஏற்கனவே சந்தோஷத்தில் இருந்த பிரதிக்ஷாவிற்கு வள்ளியம்மை கிளம்பிசென்றது மேலும் இரட்டிப்பு சந்தோஷத்தைதான் கொடுத்திருந்தது.
அப்பாவுக்கு என்ன ஆனதோ என்று அழுதுகொண்டே கிளம்பியவளை பார்த்து பிரதிக்ஷாவிற்கும் மனதிற்கு பாரமாகத்தான் இருந்தது.
இருந்தும் ஐந்து வருடகாலமாக குளியலறை தவிர்த்து எங்கு சென்றாலும் ஒரு நிழல் கிரகம் போல் தன்னையே சுற்றிவரும் வள்ளியம்மையிடமிருந்து ஒருநாளாவது தனக்கு சுதந்திரம் கிடைக்காதா..? என்று உள்ளூர ஏங்கித் தவித்துக் கொண்டிருந்தவளுக்கு, வள்ளியம்மை இங்கிருந்து கிளம்புவதாக கேள்வி பட்டதிலிருந்தே உள்ளுக்குள் இனம் புரியாத சந்தோஷம் தான்.
அழும் அவளை ஆரத்தழுவி வழி அனுப்பிவிட்டு படுக்கையில் விழுந்தவளுக்கு இறக்கைகள் இன்றி வானத்தில் பறக்கும் உணர்வுதான்.
என்னவென்றே தெரியவில்லை இன்று எல்லாமே அவளுக்கு இன்ப அதிர்ச்சிதான். மீராநந்தனை பார்த்தது, மீண்டும் ஜீவல் டிசைன் செய்ய குடும்பத்தார் ஒத்துகொண்டது, வள்ளியம்மையின் பயணம் என்று அவளின் அனைத்து சிறைக்கதவுகளும் ஒரேநாளில் திறக்கப்பட்டது போல் இருந்தது.
வள்ளியம்மை இல்லாமல் அவள் மட்டுமல்ல அவள் அறையே சுதந்தரமாக இருப்பது போல் இருந்தது.
படுத்துக்கொண்டே விழிகளை சுழலவிட்டவளின் பார்வையில் அவள் ஹேண்ட்பேக்கில் தொங்கிகொண்டிருந்த மீராபொம்மை கீச்செயின் பட, எழுந்து சென்று அந்த பொம்மையை கையில் ஏந்தியவளின் இதழ்களில் இப்போது காரணமே இல்லாமல் புன்னகை தவழ்ந்தது.
“எனக்கு என்னவோ என்ன சுத்தி நடக்கற எல்லாத்தையும் பார்த்தா.. இதுக்கெல்லாம் காரணம் நீயா இருப்பியோன்னு தோணுது.” என்று தன் மனதில் பட்டத்தை வாய்விட்டு அந்த பொம்மையை பார்த்து சொன்னவள்,
“ஆமா.. இவ்வளோ நாள் நீ எங்க போயிருந்த..? என்ன பார்க்க ஏன் நீ வரவே இல்ல..? நான் எவ்வளோ பயந்துட்டேன் தெரியுமா உனக்கு அந்த ஆக்சிடண்ட் எதாவது ஆகியிருக்குமோன்னு.” என்று சொல்லும்போதே அன்றைய விபத்தை நினைத்து சிறு படபடப்பு அவளுக்குள் தோன்றி மறையத்தான் செய்தது.
“இப்படி திடீர்-னு என் கண்ணுமுன்னாடி.. அதுவும் என் வீட்ல வந்து நிப்பன்னு நான் கொஞ்சம் நினைச்சி கூட பார்க்கல.. ஆமா… நான் இங்க இருக்கன்னு உனக்கு எப்படி தெரியும்..?” என்று அவனிடம் கேட்பதாக அந்த மீராபொம்மையிடம் கேட்டவளுக்கு இப்போதே அவனை பார்க்க வேண்டும் போல் இருந்தது.
ஆனால் வீடுநிறைய ஆட்கள் இருக்கும் போது எப்படி அவளால் அவனை பார்க்க முடியும்.
எப்படி அவனை பார்ப்பதென்று ஷாலின் நுனியை விரல் சுற்றியவாறு தீவிரமாக யோசித்தவள்,
வாட்டர் பாட்டிலில் இருந்த தண்ணீரை வாஷ்பேஷனில் ஊற்றிவிட்டு தண்ணீர்பிடிப்பது போல் காலியான வாட்டர்பாட்டிலை எடுத்துகொண்டு கீழே சென்றாள்.
அவனை பார்க்க வேண்டுமென்ற ஆர்வத்தில் கீழே வந்தவளுக்கு ஏமாற்றம் தான் எங்கும் அவன் இல்லாததை கண்டு.
தண்ணீர் பிடித்துக்கொண்டு அறைக்கு திரும்பும் வரையுமே அவன் அவள் கண்களுக்கு தென்படவே இல்லை.
“ரூம்-க்குள்ள என்ன பண்றான்..? ஒருவேளை தூங்குறானோ..?” என்று தனக்குத்தானே கேட்டுக்கொண்டவள், பின் ஏதோ நினைவு வந்தவளாய் ஓட்டமும் நடையுமாக பால்கனி பகுதிக்கு சென்றாள்.
அவள் பால்கனியிலிருந்து பார்த்தால் அவன் அறையின் பால்கனி நன்றாகவே தெரியும். ஒருவேளை அங்கு அவன் இருக்கலாம் என்ற எண்ணத்தில் அங்கு சென்று பார்த்தாள். ஆனால் அங்கும் அவன் இல்லை.
வள்ளியம்மை இல்லாததால் இரவு உணவிற்காக நான்சிதான் அவள் அறைக்கே வந்து அவளை அழைத்து சென்றாள்.
வெகுநேராமாக அவனை பார்க்க ஏங்கி கொண்டிருந்தவளின் விழிகளில் அப்போதுதான் பட்டிருந்தான் மீராநந்தன்.
குழந்தைகளுக்கு பாடம் சொல்லிக்கொடுக்கிறேன் என்ற பெயரில் அவர்களோடு சேர்ந்து அவன் விளையாடிக்கொண்டிருக்க, அவனை பார்த்த மாத்திரத்திலேயே பிரதிக்ஷாவின் இதழ்களில் புன்னகை அரும்ப, அதை நான்சியும் கவனிக்கவே செய்தாள்.
அவனை பார்த்தவாறே டைனிங் டேபுள் முன் அவள் அமர, நான்சியும் அவளுக்கு பக்கத்து இருக்கையிலேயே அமர்ந்துக்கொண்டாள் பிரதிக்ஷாவிடம் நெருங்கி பழகும் பொருட்டு.
அவளுக்கான உணவை வேலையாள் வைத்து செல்ல, அதை கூட கவனிக்காமல் பிரதிக்ஷாவின் பார்வை முழுவது வரவேற்பறையில் குழந்தைகளோடு விளையாடிக்கொண்டிருந்த மீராநந்தன் மீதேதான் இருந்தது.
“அண்ணா கிட்ட எதாவாது பேசணுமா..? நான் வேணும்னா கூப்பிடவா..?” என்று நான்சி கேட்டபோதுதான் தான் என்ன செய்துகொண்டிருக்கிறோம் என்பதே பிரதிக்ஷாவிற்கு புரிந்தது.
உடனே நிலமையை சுதாரித்துக்கொண்டு வேண்டாம் என்பது போல் தலையை இடவலமாக அசைத்தவள்,
“குழந்தைங்க நல்லா என்ஜாய் பண்றாங்க இல்ல..” என்றாள் தான் இவ்வளவு நேரம் பார்த்துக் கொண்டிருந்தது மீராநந்தனை அல்ல குழந்தைங்களைத்தான் என்பது போல்.
நம்பிட்டேன் என்பது போல் பிரதிக்ஷாவை பார்த்து புன்னகைத்தப்படி தலையை ஆட்டியவள், “அதுதான் அண்ணாவோட மேஜிக்” என்றாள் குழந்தைங்களையும் மீராநந்தனையும் பார்த்து.
“ஆக்சுவலி ஷியாம் என்ன தவிர வேற யார்கிட்டயும் போகவே மாட்டான். பேஷன்ட்-அ பார்க்கும் போது கூட என் மடியிலேதான் உட்கார்ந்திருப்பான். ஆனா பாருங்க நந்தன் ப்ரோவ பார்த்த அன்னைக்கே அவர்கிட்ட ஒட்டிக்கிட்டான். என்ன கூட இப்போலாம் அவன் தேடுறதே இல்ல. “ என்றவள்,
“நிஜமாலுமே ப்ரோ-கிட்ட என்னவோ இருக்கு..” என்றவளின் பார்வை இப்போது பிரதிக்ஷாவின் மீது பட, பிரதிக்ஷாவின் விழிகள் இப்போதும் மீராநந்தனைத்தான் பார்த்து கொண்டிருந்தது.
அவளையே சிலகணங்கள் பார்த்திருந்தவள், “அப்படித்தானே..?” என்று கேட்டபோது, அவளின் கேள்வியால் சுயத்திற்கு திரும்பிய பிரதிக்ஷாவிற்கு தலையும் புரியவில்லை காலும் புரியவில்லை.
நான்சி சொன்னதை அவள் காதில் வாங்கியிருந்தால்தானே அவளால் பதிலுக்கு எதையாவது சொல்லி சமாளிக்க முடியும். அவளின் முழுகவனமும்தான் மீராநந்தன் மீதே இருந்துவிட்டதே.
“என்ன..?” என்று பிரதிக்ஷா கேட்டபோது, பச்சரி பல் காட்டி அழகாய் அவளை பார்த்து சிரித்த நான்சி,
“ஒன்னுஇல்ல.. இட்லிசாம்பார் நல்லா இருக்குன்னு சொன்னேன்” என்று சிரித்துகொண்டே சொன்னவள், இரண்டு கரண்டி சாம்பாரை எடுத்து பிரதிக்ஷாவின் தட்டிலும் ஊற்ற, பிரதிக்ஷாவிற்குதான் தர்மசங்கடமாகிவிட்டது.
“ஐய்யோ பிரதிக்ஷா.. நீ என்ன பண்ற.. நான்சி பார்த்தது போல யாராவது பார்த்தா என்ன ஆகுறது..?” என்று தன்னையே கேட்டுக்கொண்டவள் அதன் பின் மீராநந்தன் புறம் திரும்பவே இல்லை.
குடும்ப உறுப்பினர் ஒருவரொருவராக டின்னரில் கலந்துக்கொள்ள, மீராநந்தனோ பிரதிக்ஷாவிற்கு எதிரில் இருந்த இருக்கையில் சென்று அமர்ந்துக் கொண்டான்.
உண்டுகொண்டிருந்த ஹரிஹரனின் பார்வை மீராநந்தன் மீதே இருக்க, மீராநந்தனின் பார்வையோ பிரதிக்ஷாவின் மீதேதான் இருந்தது. அதுவே ஹரிஹரனுக்கு எரிச்சலைத்தான் ஏற்படுத்தியது.
பிரதிக்ஷாவிடம் பேச வேண்டுமென்பதற்காகவே அவளுக்கு அருகில் அமர்ந்த நான்சி மெல்ல மெல்ல அவளிடம் பேச்சிகொடுக்க, ஆரம்பத்தில் தயங்கி தயங்கி பதில் சொன்ன பிரதிக்ஷாவும் அவளிடம் நன்றாக பேசவே செய்ய அதை ஹரிஹரனும் கவனிக்கவே செய்தான்.
ஷியாம் இரவு உணவை கூட கௌசல்யாவிடம் தான் ஊட்டிக்கொண்டான்.
மீராநந்தனின் கலகலப்பான பேச்சால் அனைவரின் வயிறு நிறைந்ததோ இல்லையோ வெகுநாட்களுக்கு பிறகு அனைவரின் மனமும் நிறைந்து போனது.
ஆனால் ஹரிஹரன் தான் இது எதிலும் கலந்து கொள்ளாமல் ஒதுங்கியே இருந்து நான்சியையும், மீராநந்தனையுமே கவனித்துக் கொண்டிருந்தான்.
அத்தோடு மீராநந்தன் அவனிடன் போட்டிருக்கும் சவால் குறித்தும் யோசித்தவன், உணவு உண்டு முடித்த கையோடு
அனைவருக்கும் கேட்கும் படி “ரோஷினி” என்று தன் மனைவியை அழைத்து, “பசங்கள நான் பார்த்துக்கறேன். வள்ளியம்மை இல்லாததால நீ பிரதிக்ஷா-க்கு துணையா அவ ரூம்-ல படுத்துக்கோ” என்று சொன்னபோது ரோஷினியும் சரியென்பது போல் தலையை அசைத்தாள்.
“இப்ப என்னடா பண்ணுவ..?” என்று கேட்பது போல் ஹரிஹரன் மீராநந்தனை ஒரு பார்வை பார்த்ததோடு, நக்கலாய் ஒரு சிரிப்பையும் உதிர்த்து வைக்க,
மீராநந்தனோ அவனின் பார்வையையும், நக்கல் சிரிப்பையும் ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளமால் உண்டு கொண்டிருந்தான்.
சத்யமூர்த்தியிடம் சிறிது நேரம் பேசியிருந்துவிட்டு சொன்னது போலவே தூங்குவதற்காக விளையாடிக்கொண்டிருந்த தன் மகள் மற்றும் மகனை அழைத்துகொண்டு ஹரிஹரன் கிளம்ப முற்பட்டபோதுதான்,
“ஹரி ப்ரோ” என்று எல்லோருக்கும் கேட்கும்படி மீராநந்தன் அவனை அழைக்க, ஹரிஹரன் மட்டுமல்ல மொத்த குடும்பமுமே இப்போது மீராந்தந்தனைதான் பார்த்தது.
ஆனால் அவனோ கேஷ்வலாக, “வரும்போது பசங்களுக்காக நிறைய சாக்லேட் வாங்கிட்டு வந்தேன். இப்போதான் அது நியாபகம் வருது. ஒரு டூ மினிட்ஸ் வெயிட் பண்றீங்களா” என்றவன் ஹரிஹரனின் பதிலுக்கு கூட காத்திராமால் ஓட்டமும் நடையுமாக தன் அறைக்கு சென்று, சென்ற வேகத்திலேயே தன் கையோடு கொண்டுவந்திருந்த ஃபாரின் சாக்லெட்களை குழந்தைகளின் கைகளில் கொடுக்க, கை நிறைய சாக்லெட்களை பார்த்த குழந்தைகளுக்கோ சந்தோஷத்தில் துள்ளிக்குதிக்க ஆரம்பித்து விட்டனர்.
குழந்தைகளின் சந்தோஷத்தை பார்த்து இப்போது பெரியவர்களின் இதழ்களில் கூட புன்னகை அரும்பியது.
“குழந்தைகளுக்கு மட்டும்தான் சாக்லேட்-ஆ..? எங்களுக்குலாம் இல்லையா..?” என்றாள் சிரித்துக்கொண்டே ரோஷினி.
“ஏன் இல்ல… சாக்லேட்லே உங்களுக்கு தான் ஸ்பெஷல் சாக்லேட்” என்றவன் தன் பேண்ட் பாக்கெட்டில் வைத்திருந்த சாக்லேட்டை எடுத்து ரோஷினியிடம் கொடுக்க,
“வாவ்.. தேங் யூ..” என்றவள், அடுத்த கணமே அதை பிரித்து வாயிலும் போட்டுக்கொள்ள, “சரியான தின்னிபண்டாரம்” என்று மனதிற்குள் அவளை திட்டியவன், அதன் பின்னே குழந்தைகளை அழைத்துக் கொண்டு அறைக்கு சென்றான் உறங்கும் பொருட்டு.
ஹரிஹரன் சொல்லியிருந்தது போலவே ரோஷினி பிரதிக்ஷாவுடன்தான் படுத்துகொண்டாள்.
எப்படியும் ரோஷினி இருக்கும் போது மீராநந்தன் பிரதிக்ஷா அறைக்குள் நுழைய மாட்டான் என்பது ஹரிஹரன் எண்ணம்.
படுத்த உடனே ரோஷினி உறங்கிவிட, பிரதிக்ஷாவிற்குதான் உறக்கம் வரவே இல்லை.
இத்தனை நாட்கள் அவனுக்கு என்ன ஆனதோ என்ற பதற்றத்தில் அவளுக்கு உறக்கம் வரவில்லையென்றால் இன்று அவனை பார்த்துவிட்ட சந்தோஷத்தில் அவளுக்கு உறக்கம் வரவே இல்லை.
என்னதான் அவனை நேரில் பார்த்துவிட்டிருந்தாலும் அவனிடம் பேசமுடியவில்லையே என்ற ஏக்கமும் அவளுக்குள் இருக்கத்தான் செய்தது.
அவன் பற்றிய சிந்தனையில் உறக்கம் வராமல் உருண்டு உருண்டு படுத்துக்கொண்டிருந்தவளுக்கு, ரோஷினியிடமிருந்து வந்த குறட்டை சத்தம் வேறு கண்களை மூட கூட விடவில்லை.
அவளின் குறட்டை சத்தத்தை நிறுத்தும் பொருட்டு “அக்கா… ரோஷினி அக்கா..” என்று இரண்டு மூன்று முறை எழுப்பி கூட பார்த்துவிட்டாள்.
ஆனால் ரோஷினி எழுந்தபாடில்லை. மாறாக அவளிடமிருந்து வந்த குறட்டையின் சத்தம்தான் கூடிப்போயிருந்தது.
“கடவுளே.. இன்னைக்கு நைட் தூங்குன மாதிரிதான்..” என்று தலையை பிடித்துகொண்டு எழுந்து அமர்ந்தவள்,
பின் குறட்டை சத்தம் காதில் விழாதவாறு காதில் பஞ்சை வைத்துகொண்டதோடு, இரு கைகளாலும் காதை இறுக்கமாக மூடிக்கொண்டு அவளுக்கு முதுகு புறம் காட்டி படுத்துகொண்டாள்.
அவள் நிலை இப்படியென்றால் குழந்தைகளை நான் பார்த்துக் கொள்கிறேன் என்று கூட்டிச் சென்ற ஹரிஹரனின் நிலை அவளை விட பாவமாக இருந்தது.
“டேடி ஸ்டோரி சொல்லுங்க.. டேடி பாத்ரூம் வருது.. டேடி தண்ணீர் வேணும்.” என்று இரு பிள்ளைகளும் மாறி மாறி அவனை பாடாய் படுத்தியெடுக்க, ஏண்டா ரோஷினியை அங்கு அனுப்பினோம் என்றாகி விட்டது ஹரிஹரனுக்கு.
இருவரையும் சமாளித்து உறங்கவைத்துவிட்டு அவன் உறங்குவதற்குள் மணி ஒன்றாகி விட்டிருந்தது.
உறக்கம் வரவில்லையென்றாலும் கண்களை இறுக்கமாக மூடிக்கொண்டு படுத்திருந்தவளின் முகத்தில் திடீரென சூடான காற்று பட, சட்டென்று இமைகளை திறந்தவளுக்கு தூக்கிவாரித்தான் போட்டது இத்தனை நெருக்கத்தில் இருந்த மீராநந்தனின் முகத்தைப் பார்த்து.




